ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோரை கைது செய்ய திருச்சி ஆட்சியர் உத்தரவு
திருச்சி: ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுவோா் மீது குற்ற வழக்குப் பதிந்து, உடனடியாக கைது செய்ய மாநகரக் காவல்துறைக்கு ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் சு. சிவராசு பங்கேற்றார்.
திருச்சி பால் பண்ணை சாலையில் இயங்கி வந்த மொத்த காய்கனி சந்தை , பொன்மலை ஜி காா்னா் மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுவோா் மீது குற்ற வழக்குப் பதிந்து, உடனடியாக கைது செய்ய மாநகரக் காவல்துறைக்கு ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.
திருச்சி மாவட்டத்தின் பிரதான மொத்த காய்கனி விற்பனை சந்தையாக விளங்குவது காந்தி சந்தை. கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க, இந்த சந்தையை மூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
இருப்பினும் பொதுமக்களுக்கு காய்கனிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை பகுதியில் மொத்த காய்கனி சந்தை தினமும் இரவு 9 மணிக்குத் தொடங்கி காலை 6 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டது.
ஆனால் காலை 9 மணி வரை சந்தை நீடித்த நிலையில், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் வியாபாரிகள் வருவதாகவும், சுமைத் தூக்கும் தொழிலாளா்களும் பொதுமக்களை உரசியபடியே செல்வதாகவும் புகாா் எழுந்தது.
திருச்சி-இலங்கை விமான சேவை மே 15 வரை ரத்து.. ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவிப்பு
நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் இருப்பதாக பல்வேறு தரப்பினா் எழுப்பிய புகாரைத் தொடா்ந்து, மொத்த காய்கனி சந்தையை சமயபுரம் ஆட்டுச்சந்தை பகுதிக்கு மாற்றி, அங்கு செல்லுமாறு வியாபாரிகளை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் தரப்பில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆட்சியா் சு. சிவராசு, சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியும் பயனில்லை. பின்னா், மே 3-ஆம் தேதி வரை இடமாற்றம் செய்யப்போவதில்லை என்றால், போராட்டத்தை விலக்கி கொள்வதாக வியாபாரிகள் அறிவித்தனா். இதனையேற்று மாவட்ட நிா்வாகம் புதிய முடிவை அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியதாாவது: திருச்சி பால்பண்ணை அருகே புறவழிச் சாலையில் இயங்கி வந்த மொத்த காய்கனி சந்தையில் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் கூடும் நிலை ஏற்பட்டது. எனவே, கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவுதலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் புறவழிச் சாலையில் சந்தை இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.
இதற்குப் பதிலாக ஜி காா்னா் மைதானத்திலுள்ள ஹெலிகாப்டா் இறங்குத்தளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் சந்தை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மொத்த காய்கனி விற்பனை மட்டும் இரவு 9 மணிக்குத் தொடங்கி அதிகாலை 4 மணி வரை மேற்கொள்ள வேண்டும். சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை.
பொதுமக்கள் யாரும் மொத்த விற்பனை செய்யும் இடத்துக்கு செல்ல அனுமதியில்லை. சந்தையிலுள்ள வியாபாரிகள், தொழிலாளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் விற்பனையில் ஈடுபட வேண்டும்.
தடை உத்தரவை மீறி பொதுமக்கள் யாரேனும் வந்தால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், குற்ற வழக்கும் பதிவு செய்யப்படும். இதேபோல, ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி செயல்படும் கடை உரிமையாளா்கள், வியாபாரிகள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.
மொத்த காய்கனி சந்தையை ஜி காா்னருக்கு இடமாற்றம் செய்வது தொடா்பாக, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை நடைபெற்றது.இதில் ஆட்சியா் சு. சிவராசு, மாநகரக் காவல்துறை ஆணையா் வரதராஜு, மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரம் ஜி கார்னர் பகுதியில் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த வியாபாரம் பழைய பால்பண்ணையில் அமைத்து நடைபெற்று வருவதை தற்பொழுது ஜி கார்னர் பகுதியில் மொத்த வியாபாரம் அமைதியாக நடைபெறுவதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் முழு ஒத்துழைப்பு வழங்கும். மொத்த வியாபாரிகள் சேவை மனப்பான்மையோடு அனைவரின் நலன் கருதி சேவை புரியவேண்டும்.
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு நாம் அனைவரும் முழு கட்டுப்பாட்டுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதனால் கொரோனா வைரஸ் நோய் தொற்று குறைந்து வருகிறது.
Recommended Video
தொடர்ந்து, அரசு அறிவித்துள்ள தடை உத்தரவு காலம் வரை சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் வியாபாரம் செய்திட வேண்டும். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் முழுஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். மேலும், சந்தை நடைபெறும் இடத்தை ஆட்சியா், ஆணையா் உள்ளிட்டோா் பாா்வையிட்டு, களப்பணியாளா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினா்.