கடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்
Recommended Video
திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரியில் முக்கொம்பில் மணல் திட்டு உடைந்ததால் கொள்ளிடம் அணையை நோக்கி தண்ணீர் பாய்வதை மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு செய்தார்.
கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை நோக்கி வந்தடைகிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் கடந்த 13-ந் தேதி திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை கடந்து நேற்று முன்தினம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது.
வேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்
மேலணை
முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மாயனூர் அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் முக்கொம்பு மேலணைக்கு வருகிறது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
காவிரி ஆறு
இதனால் வறண்டு மணற்பரப்பாக காட்சி அளித்த காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ஓடை போல ஓடிய நிலை மாறி தற்போது பரந்து விரிந்து இருபுறமும் கரையை தொட்டபடி செல்கிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடுவதை காண ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் நேற்று பொதுமக்கள் திரண்டனர்.
மகிழ்ச்சி
இருபுறமும் கரையை தொட்டபடி செல்லும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். சிலர் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்ததை காணமுடிந்தது.
மணல் திட்டு
கம்பரசம்பேட்டை தடுப்பணையிலும் தண்ணீர் பாய்ந்தோடுவதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு ரசித்தனர். காவிரியில் பாயும் தண்ணீர் நேராக கல்லணை நோக்கி செல்கிறது. இந்த நிலையில் முக்கொம்பு மேலணைக்கு நேற்று முன்தினம் காலையை விட இரவில் தண்ணீர் அதிகமாக வந்ததால், மேலணைக்கு முன்னதாக காவிரி ஆற்றிற்கு தண்ணீரை பிரித்து அனுப்ப அமைக்கப்பட்டுள்ள மணல்திட்டு (கொரம்பு) உடைந்தது.
காவிரி ஆறு
இதனால் அதன் வழியாக முக்கொம்பு கொள்ளிடம் அணையை நோக்கி தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது. காவிரி ஆற்றை நோக்கி முழுவதும் பாய்ந்தோட வேண்டிய தண்ணீரில் சிறிதளவு மணல்திட்டில் இருந்து பிரிந்து கொள்ளிடம் நோக்கி செல்கிறது.
அதிகபடியான நீர்
இந்த தண்ணீர் கொள்ளிடம் அணையில் தேங்கி வருகிறது. கடந்த ஆண்டு மதகுகள் உடைந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தடுப்புகள் முன்பும் தண்ணீர் தேங்குகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகமாகும் போது உடைந்த மணல்திட்டில் இருந்து கொள்ளிடம் அணையை நோக்கி மேலும் தண்ணீர் அதிகமாக வரும்.
பொதுப்பணித் துறை அதிகாரிகள்
இதனால் தற்காலிக தடுப்புகளை தாண்டி தண்ணீர் வழிந்தோட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்காலிக தடுப்புகளை பலப்படுத்தும் பணி, புதிதாக கதவணை கட்டும் பணியும் பாதிப்படையலாம் என தெரிகிறது. இதற்கிடையில் முக்கொம்பு மேலணையில் கலெக்டர் சிவராசு நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார். காவிரியில் தண்ணீர் பாய்ந்தோடி செல்வதை பார்வையிட்டார். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.