ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை.. திருச்சி கலெக்டர் எச்சரிக்கை
திருச்சி: ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்த 483 பேரின் கைகளில் முத்திரை குத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
Recommended Video
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில் : "திருச்சி காந்தி சந்தையில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதாக புகார் எழுந்தது. அதனால் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், இன்று முதல் (மார்ச் 26) காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும்.
அந்த வியாபாரம் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை மட்டுமே நடைபெறும். சில்லரை வியாபாரிகளான மளிகைக் கடைக்காரர்கள் மட்டுமே காய்கறிகளை வாங்க வர வேண்டும். அப்படி வரும் வியாபாரிகள் மாஸ்க் அணிந்து வரவேண்டும். அதேபோல் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மாஸ்க் அணிய வேண்டும். வாரத்தில் சனி, ஞாயிறு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும்.
மளிகை கடைகள்
திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் மாஸ்க் கண்டிப்பாக போட வேண்டும் போடவில்லை என்றால் காவல் துறை வழக்கு பதிவு செய்வார்கள். மாநகா், ஊரக பகுதிகளில் உள்ள 1,800 மளிகை கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருள்களை பொதுமக்கள் வாங்கிக்கொள்ளலாம். கட்டாயம் வியாபாரிகள், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தே செல்லவேண்டும். முகக்கவசம் அணியாமல் விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். சமூக விலகல் மூலமே பொருள்களை வாங்கவேண்டும். பால் உள்ளிட்ட அத்தியாவசிய, உணவு பொருள்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எத்தனை நாள் விடுமுறை
தடை உத்தரவு உள்ள வார நாள்களான மார்ச் 28, 29, ஏப்ரல் 4, 5, 11, 12 ஆகிய 6 நாள்களும் காய்கறி மார்கெட்டுககு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாள்களில் மாநகராட்சி ஊழியா்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபடுவார்கள். வெளிநாடுகளில் இருந்து திருச்சி மாவட்டத்துக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் வருகை தந்த நபா்கள் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களில் 483 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவா் மீண்டும் துபைக்கு சென்றுவிட்டனா். மேலும், 4 நபா்களின் முகவரிகள் போலியாக இருந்ததால் அவா்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீடுகளுக்கு நோட்டீஸ்
ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் நோட்டீஸ் அறிவிப்பு ஒட்டப்பட்ட நபா்கள் வெளியில் நடமாட கூடாது. இந்த உத்தரவை மீறி யாரேனும் தனிமையில் இல்லாமல் சமுதாய மக்களோடு வெளியில் நடமாடுவதாக தெரியவந்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடா்புடைய நபா்களின் கடவுச் சீட்டு முடக்கப்படுவதுடன், குடும்பத்தினா் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 11 நபா்களில் 6 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அவா்களுக்கு எந்தவித நோய் தொற்றும் இல்லை. 5 போ் மட்டும் தொடா் சிகிச்சையில் உள்ளனா். இவைத்தவிர, புதன்கிழமை புதிதாக ஒருவா் சோ்க்கப்பட்டுள்ளார் அவருக்கும் தொற்று இல்லை. ரத்தமாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாடு திரும்பியவர்கள்
வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களுடன் கடந்த 10 நாள்களுக்குள் தொடா்பில் இருந்து அவா்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தும்மல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு உரிய சிகிச்சை பெற வேண்டும். மாவட்டத்தில் பணிபுரியும் மருத்துவப் பணியாளா்கள் சென்றுவர பிரத்யேகமாக 3 வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. துப்புரவுப் பணி, தூய்மைப் பணி, சிகிச்சை, விழிப்புணா்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், உள்ளாட்சிப் பணியாளா்கள் என அனைவருக்கும் தேவையான முகக் கவசம், கையுறை, பாதுகாப்பு உடைகள் வழங்கப்படும்.
வீட்டை விட்டு வர வேண்டாம்
கொரோனோ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். நோய் தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை. தனிமைப்படுத்தல் மூலம் மட்டுமே இந்த நோய் பரவுதலை தடுக்க முடியும். குறிப்பாக 50 முதல் 60 வயதுக்குள்பட்ட நபா்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். குழந்தைகளையும் வெளிப்புற இடங்களில் விளையாட அனுமதிக்கக் கூடாது. வீடுகளில் குடும்பம், குடும்பமாக தனித்திருத்தலே பலன் தரும். அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எந்தவித தடையும் இல்லை. திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதியிலிருந்து ரூ.40 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் தனது மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 1 கோடி ஒதுக்கி இருக்கிறார்.
தங்கும் இல்லங்கள்
திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் வீடற்ற, ஆதரவற்ற முதியோருக்காக உணவு வழங்க சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்களின் உதவியைப் பெற்று உணவு வழங்கப்படுகிறது. புதன்கிழமை மட்டும் 2 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் மாவட்டம் முழுவதும் உள்ள ஆதரவற்றோரை தேடி வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து அனைவருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படும். தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தில் உள்ளாட்சிகளில் வீடற்ற, ஆதரவற்றோருக்கான தங்கும் இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன. தேவையிருப்பின் இந்த இல்லங்களுக்கு அவா்களை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிக்கையாளர்களும் இரண்டு பேர் வாகனத்தில் செல்ல கூடாது.இது எல்லோருக்கும் பொருத்தும் ஆகவே ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.