மிரட்டும் காய்ச்சல்கள்... விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருச்சி மாநராட்சி தீவிரம்!
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 75க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேருக்கு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதால் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் காய்ச்சல்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள், பெரியவர்கள் என சராசரியாக 101 டிகிரி காய்ச்சலோடு அனுமதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர 75க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல்கள் அதிகரித்து வருவதால் திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில், ரெயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்கு பன்றிக் காய்ச்சல் மற்றும் கையை சுத்தமாக கழுவுதல் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் நடந்த நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உதய குமார் ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
[தொடங்கியது வட கிழக்கு பருவமழை.. 2 நாட்களுக்கு கடலோர பகுதிகளில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்]
பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வுக்காக மாநகராட்சி, ரெயில்வே அலுவலர்கள் மற்றும் குழந்தை ஏசு நர்சிங் பள்ளி மாணவிகள், அன்பு பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள், சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு ரெயிலில் வந்த பயணிகளுக்கு கைகளை அடிக்கடி கழுவுவதால் ஏற்படும் நன்மை குறித்தும், கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சோப் அல்லது வேதிப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கொண்டு 15 முதல் 20 நொடிகள் கைகளை கழுவினால் கிருமிகளை கொன்று விடும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ரெயில் பயணிகளுக்கு அங்கேயே கை கழுவ சோப் மற்றும் 'லிக்யூட்'(சோப் ஆயில்) வழங்கப்பட்டு கையை சுத்தமாக கழுவ செய்தனர். இதில் 1000-க்கும் மேற்பட்ட ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதே போன்று திருச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருச்சி மாநகராட்சி மற்றும் விமான நிலையம் இணைந்து விமான நிலையத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மற்றும் கைகளில் உள்ள கிருமிகளை அளிக்கும் வகையில் கைகழுவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.