காணொலி மூலம் புகார்கள்.. முன்மாதிரி முயற்சி.. திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணனுக்கு குவியும் பாராட்டுக்கள்
திருச்சி: கொரோனா வைரஸ் தாக்கத்தால் லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், காணொலி மூலம் வாரத்தில் 2 நாட்கள் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளையும், புகார்களையும் கேட்டறிகிறார் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்.
இவரது புதுமையான முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதோடு பாராட்டும் குவிந்த வண்ணம் உள்ளது.
மக்களை அலைக்கழிக்க வேண்டாம் என்பதாலும், தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி நேர விரயத்தை தவிர்க்கலாம் என்ற எண்ணத்தோடும் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ். காணொலி திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
காடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு -மருத்துவமனையில் சிகிச்சை
ஜல்லிக்கட்டு
பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்.... இந்த பெயரை அவ்வளவு எளிதாக தமிழக இளைஞர்கள் மறந்திருக்க மாட்டார்கள். காரணம் மெரினா புரட்சி என்றழைக்கப்படும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சுமூகமாக கையாண்டு அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தவர். உருட்டல், மிரட்டல் என காக்கிச்சட்டைக்கே உரிய வழக்கமான பாணியை தூக்கிவீசிவிட்டு தானும் ஒரு இளைஞராகவே அப்போது மாறிவிட்டார்.
பேச்சுவார்த்தை
இவர் சென்னை மயிலாப்பூர் டி.சி.யாக இருந்த போது தான் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்றது. சாரை சாரையாக இளைஞர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வங்கக்கடலோரம் குவிந்தது. வங்கக்கடலுக்கும், மனிதக்கடலுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஜல்லிக்கட்டு போராட்டம் கொளுந்துவிட்டு எரிந்த நேரத்தில் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதிப்படுத்தி வைத்திருந்தார். இவரின் அணுகுமுறை போராட்டக்களத்தில் இருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை கவர்ந்தது.
வாரம் 2 நாட்கள்
பின்னர் பல இடங்களுக்கு மாறுதலாகி இப்போது திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்.. தனது கட்டுப்பாட்டின் கீழ் 5 மாவட்டங்கள் வருவதால் அந்த 5 மாவட்ட மக்களின் குறைகளையும், புகார்களையும் வாரத்திற்கு 2 நாட்கள் இவர் நேரில் கேட்பது வழக்கம். திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமை என இரண்டு நாட்களும் இவரை சந்தித்து தங்கள் புகார் மீது காவல் ஆய்வாளர் எடுத்த நடவடிக்கைகள், அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் குறித்தெல்லாம் பொதுமக்கள் முறையிடுவார்கள்.
காணொலி திட்டம்
இப்போது கொரோனா கால ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாததால், காணொலி காட்சி மூலம் திங்கள், வெள்ளி ஆகிய இரண்டு தினங்களும் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை பொதுமக்களை சந்தித்து அவர்களின் புகார்களை கேட்டறிகிறார். இந்த முன்மாதிரி முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், கொரோனாவிற்கு பிறகும் இந்த நடைமுறையை பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் தொடருவார் எனவும் அவரது அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.