தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்கிறோம்.. திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன்
திருச்சி: திருச்சி சரக காவல்துறைக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தனியாக வசித்துவருகின்ற மூத்த குடிமக்களின் அடிப்படைத் தேவைகளை தொய்வின்றி நிறைவேற்றுகிற பணியில் காவல்துறையினர் செய்து வருகிறார்கள் என டி.ஜ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்திடவும் தடுத்திடவும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவானது ஏராளமான பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தனியாக வசித்துவரும் முதியோர்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை கடுமையாக பாதித்துள்ளது. வீடுகளில் தனியாக வசித்துவரும் முதியோர்களை திருச்சி சரக காவல்துறையினர் அடையாளம் கண்டு அவர்களுக்கு துணையாக இருப்பதோடு, உதவிகளையும் செய்து வருகின்றனர்.
காவல்துறையின் இத்தகைய செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், 'எதிர்பாராத நிகழ்வான இந்த காலகட்டத்தில் திருச்சி சரக காவல்துறைக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தனியாக வசித்துவருகின்ற மூத்த குடிமக்களின் அடிப்படைத் தேவைகளை தொய்வின்றி நிறைவேற்றுகிற பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
ஏற்கனவே மார்ச் 24ஆம் தேதி முதல் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ரோந்து செல்லும் பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்கள் பகுதியில் தனியாக வசிக்கின்ற முதியோர்களை சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். திருச்சி காவல் சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இது வரையில் மொத்தம் 168 தன்னார்வலர்கள் வீடுகளில் தனியே வசித்து வருகிற முதியோர்களுக்கு உதவி செய்வதற்கு தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து, இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள "REACH ME" என்ற மொபைல் செயலி மூலம் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இவர்கள் தனியாக வசித்துவரும் முதியோர்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
திருச்சி சரகத்தில் வீடுகளில் தனியாக 1,852 மூத்த குடிமக்கள் வசித்துவருவதாகக் கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இதுவரை தேவை அடிப்படையில் 219 மூத்த குடிமக்களுக்கு அத்தியாவசிய மளிகை சாமான்கள் வாங்கி கொடுக்கப்பட்டது.
மேலும் 904 முதியோர்களுக்கு உணவுப் பொருட்கள், முகக்கவசம் போன்றவை அளிக்கப்பட்டது. மருத்துவ உதவி தேவைப்பட்ட 142 முதியோர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டன. திருச்சி காவல் சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தனிப்பிரிவு காவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மூலம் தனியாக வசித்துவரும் முதியோர்கள் அடையாளம் காணப்பட்டனர். அந்த முதியோர்களை நேரடியாக சந்தித்து கரோனா வைரஸ் தொற்று பரவவிடாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் வீடுகளில் தனியாக வசித்துவரும் முதியோரின் அருகே வசிப்பவர்களை காப்பாளர்களாகவும் அல்லது உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் காப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட முதியோர்களின் அன்றாடத் தேவைகள் கண்டறியப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்பட்டது. உதவி தேவைப்படும் நேரங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய முக்கிய தொலைபேசி எண்கள், காவல் நிலையத்தின் தொலைபேசி எண், அந்தப் பகுதியில் ரோந்து செல்லும் காவலரின் தொலைபேசி எண், விழிப்புணர்வு அளிக்கும் துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டன.
அனைத்து முதியோர்களுக்கும் முகக்கவசம் அளிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றிவரும் தன்னார்வலர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு அருகே தனிமையில் உள்ள முதியோர் ஒவ்வொருவரின் தினசரி தேவைகளை நிறைவேற்றித் தரும் பணி ஒப்படைக்கப்பட்டது.
ஒவ்வொருவரும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி பணியாற்ற அறிவுரை வழங்கப்பட்டது. தன்னார்வலர்கள் இல்லாத சில குறிப்பிட்ட பகுதிகளில் அந்தப் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒத்துழைப்புடன் உதவி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
காவல்துறை எடுத்த இந்த முயற்சியின் மூலம் தனியாக வசித்து வந்த முதியோர்களின் மனோதிடம் மிகப்பெரிய அளவில் மேம்பட்டுள்ளதோடு, இது அவர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. இந்த உதவி செய்யும் நடைமுறையானது தொய்வின்றி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றுகிற காவல் ஆய்வாளர்கள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தினசரி உதவி தேவைப்படுகிற மூத்த குடிமக்களின் கோரிக்கைகள் முறையாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.