திருச்சியில் ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் ஜரூர்... 4 கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி
திருச்சி: திருச்சி மாவட்டத்தின் நான்கு கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில், பயிற்சிக் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளான பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கருங்குளம், ஆவாரங்காடு, பெரிய அணைக்கரைப்பட்டி, மலையடிப்பட்டி மற்றும் செவலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை தயார்படுத்துவது வழக்கம். காளைகளுக்கு தினமும் 3 முதல் 4 கி.மீ. தொலைவிற்கு நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி மற்றும் மண்ணை குத்தும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தினசரி இரு வேளைகள் காளைகளுக்கு அனைத்து சத்துகளும் கலந்த கலவை உணவுகளை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், வருகிற 17-இல் மருங்காபுரி ஒன்றியம் ஆவாரங்காடு, 18-இல் பொத்தமேட்டுப்பட்டி, 20-இல் வையம்பட்டி ஒன்றியம் பெரிய அணைக்கரைப்பட்டி, 27-ஆம் தேதி கருங்குளம் ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, அந்தப்பகுதிகளில் முகூர்த்தக்கால் நடுதல், வாடிவாசல், தடுப்பு வேலிகள், ஆடுகளம், ஓடுபாதை, காளைகளுக்குப் பயிற்சி என ஜல்லிக்கட்டுக்கான பணிகள் விறுவிறுப்பு நிலையை அடைந்துள்ளது.