முதலமைச்சர் என்ன PWD பொறியாளரா...? எங்களுக்கும் கேட்க தெரியும் -அன்பில்மகேஷ் பொய்யாமொழி
திருச்சி: எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை கூறினால் அவரை மருத்துவரா என முதலமைச்சர் கேட்பதாகவும், குடிமராமத்து பணிகள் பற்றி பேசும் முதலமைச்சரை பதிலுக்கு PWD பொறியாளரா என தங்களாலும் கேட்க முடியும் எனவும் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளை பொறுத்தவரை அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாக திமுக முன்வைக்கும் யோசனைகளையும், ஆலோசனைகளையும் அரசு கண்டும் காணாமல் உள்ளதாக வேதனை தெரிவித்தார்.
திமுக எம்.எல்.ஏ.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 2015-ல் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்ட கதையாக கொரோனா விவகாரத்திலும் அரசு அலட்சியம் காட்டக்கூடாது எனக் கூறினார். மேலும், சென்னை, திருச்சி என்றில்லாமல் தமிழகம் முழுவதும் மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மூடி மறைத்து
தமிழக அரசை பொறுத்தவரை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகளை அழைத்து பேசி உண்மையான நிதி நிலவரத்தை எடுத்துக்கூற தயங்குவதாகவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இவ்வளவு தான் நிதி உள்ளது, இதைவைத்து நாங்கள் இந்த பணிகளைச் செய்கிறோம், இனி மேற்கொண்டு செய்யவேண்டுமானால் இவ்வளவு நிதி பற்றாக்குறை உள்ளது என எதிர்க்கட்சியிடம் முதலமைச்சர் கூற தயங்குவதற்கான காரணம் புரியவில்லை என்றார்.
மருத்துவரா எனக் கேள்வி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரினால், அவரை பார்த்து மருத்துவரா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்பதாக தெரிவித்தார். அண்மையில் திருச்சி வந்த முதலமைச்சர் குடிமராமத்து பணிகள், பொதுப்பணித்துறை பணிகள் பற்றியெல்லாம் பேசியதாகவும் பதிலுக்கு அவரை பார்த்து நீங்கள் என்ன PWD பொறியாளரா என தங்களாலும் கேட்க முடியும் என அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
வேலையில்லை
நீண்ட நாட்கள் நிலவிய ஊரடங்கால் மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனிடையே தமிழக அரசால் நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை எனக் கூறினார். மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து என உதாரணம் கூறும் முதலமைச்சர் அண்டை மாநிலமான கேரளாவை பின்பற்றினாலே போதுமானது என்றார். இதனிடையே தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வேலையின்மை 27 % அதிகரித்துள்ளதாக அன்பில் மகேஷ் கூறினார்.