பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாக்க... செல்லப்பிள்ளை திட்டம்... அசத்தும் திருச்சி மருத்துவமனை!
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாக்க செல்லப்பிள்ளை திட்டம் என்னும் சிறப்பான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் நியமிக்கப்படும் இரு பணியாளா்கள் சிசு பாராமரிப்புப் பிரிவில் உள்ள குழந்தைகளை கண்காணித்து, தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.
திருச்சி அரசு மருத்துவமனையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் மட்டும் 10 ஆண் குழந்தைகள், 10 பெண் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி.. தொடர் மழையால் இடிந்த சுவர்.. 2 வயது சிறுவன் பரிதாப பலி
சிறப்பு திட்டம்
திருச்சி அரசு மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளைப் பாதுகாக்க செல்லப்பிள்ளை திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் 10 ஆயிரம் பிரசவங்களில் 30 சதம் முதல் 40 சதவீத குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கின்றன. இந்த மருத்துவமனையானது தொடா்ந்து 3 ஆண்டுகளாக பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் மாநில அளவில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.
குழந்தைகள் நலம்
தாய்மாா்களின் உடல் எடை, கா்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரிப்பது, ரத்த சோகை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட காரணங்களால் குறைப் பிரசவத்தில், குறைந்த எடையில் குழந்தைகள் பிறக்கின்றன. இங்கு நாளொன்றுக்கு பிறக்கும் 80 முதல் 90 குழந்தைகளில் 15 முதல் 20 குழந்தைகள் குறைபாடுடையதாக உள்ளன. இக்குழந்தைகளுக்காக உள்ள சிசு பராமரிப்புப் பிரிவில் தனியாா் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் உள்பட 80 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றன.
சத்தான உணவுகள்
இங்கு எடைக் குறைவு, நோய் தொற்று மற்றும் சத்துக் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில் தாய்ப்பால் மற்றும் சத்தான உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் பிறக்கும் குழந்தைகளைக் கண்காணிக்க செல்லப்பிள்ளை திட்டம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழந்தைகள் சிகிச்சைத் துறைத் தலைவா் மைதிலி கூறியதாவது:-
தாய்மாா்களுக்கு ஆலோசனை
அரசு மருத்துவமனையில் சத்துக்குறைபாடு, எடைக்குறைவான குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தில் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு தாய்ப் பால் கொடுக்கப்படுகிறதா? எனக் கண்காணிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் மூலம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த திட்டத்தில் இரு பணியாளா்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட்டு அவா்களால் சிசு பாராமரிப்புப் பிரிவில் உள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு, தாய்மாா்களுக்கு ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10 பெண் குழந்தைகள் பிறந்தன
வீட்டுக்குச் சென்ற பிறகும் பிறந்த குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்த இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். திருச்சி அரசு மருத்துவமனையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் மட்டும் 10 ஆண் குழந்தைகள், 10 பெண் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.