திங்கள் முதல் திருச்சி காந்தி மார்கெட் பொன்மலை ஜி.கார்னர் மைதானத்துக்கு இடமாற்றம்: கலெக்டர்
திருச்சி: மக்கள் கூட்டத்தால் சமூக தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்கெட் பொன்மலை ஜி.கார்னர் மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.இந்த மார்கெட் வருகிற திங்கட்கிழமை முதல் செயல்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த காய்கனி தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான சந்தையாக விளங்குவது காந்திமார்கெட் காய்கனி சந்தை மட்டுமே. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சில்லரை வியாபாரிகள் இங்கு வந்துதான் தங்களுக்கு தேவையான காய்கனிகளை வாங்கிச் செல்வது வழக்கம். மொத்தம், சில்லரை வியபாராம் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் காந்திசந்தையில் உள்ளன.
கடந்த சில நாள்களாக இங்கு பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் கூட்ட நெரிசலுக்கு இடையே காய்கனிகளை வாங்கிச் சென்றனர். இதனால், நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக கருதி வியாபாரிகள், காவல்துறை, வருவாய்த்துறை என முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தை ஆட்சியர் சு. சிவராசு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த உத்தரவு உடனடியாக வியாழக்கிழமை அமலுக்கு வந்தது.
இருப்பினும், வியாபாரிகள், விவசாயிகள், காய்கறி விற்பனையாளர்கள், சுமை தூக்குவோர் என மார்கெட்டில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், சமூக இடைவெளியும் பின்பற்றப்படுவதில்லை. இதையடுத்து காந்திமார்கெட்டை பொன்மலை ஜி-கார்னர் பகுதிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காந்திசந்தைக்கு விடுமுறை என்பதால் திங்ள்கிழமை முதல் ஜி.கார்னர் பகுதியில் காய்கனி சந்தை செயல்படும். பகல் நேரத்தில் பொதுமக்கள் இங்கு காய்கனிகளை வாங்கிச் செல்லலாம்.
இதற்காக பொதுமக்கள் நிற்கும் பகுதி, வியாபாரிகள் அமரும் பகுதி ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிட்ட இடைவளி இருக்கும் வகையில் வெள்ளை நிற வண்ணத்தில் குறியீடு வரையப்பட்டுள்ளது. உழவர் சந்தை இடமாற்றம்: இதேபோல, திருச்சி மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளும் இடமாற்றம் செய்யப்படுகின்றன. தென்னூர் உழவர் சந்தையானது மத்திய பேருந்துநிலைய வளாகத்தில் இயங்கவுள்ளது.
மணப்பாறை,திருவெறும்பூர், திருவரங்கம், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகள் அந்தந்த பகுதியில் உள்ள பேருந்து நிலையங்கள் அல்லது கல்வி நிறுவன மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.