பலாத்காரம் இல்லையாம்.. 14 வயது சிறுமியை உயிரோடு எரித்து கொன்றது ஏன்.. யார்.. பரபரக்கும் திருச்சி!
திருச்சி சிறுமியை எரித்து கொன்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது
திருச்சி: முள் காட்டில் எரிந்த நிலையில் கிடந்த 14 வயது சிறுமியின் சடலத்தை டாக்டர்கள் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்கள் அடங்கிய குழு போஸ்ட் மார்ட்டம் செய்ததில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.. இதனிடையே, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கி உள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்டது சோமரசன் பேட்டை அருகே உள்ளது அரியாவூர் அதவத்தூர் பாளையம்.. இங்கு வசித்த பெரியசாமி என்பவர் மகள்தான் உயிரிழந்த சிறுமி!
இந்த சோமரசன்பேட்டை என்பது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வரும் பகுதி.. ஆனால் பெண்களுக்கு என்று வசதியாக பொதுக்கழிப்பிடம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால்தான் இந்த சிறுமி, நேற்று மதியம் வீட்டு பக்கம் இருந்த முள் காட்டிற்கு சென்றார் என ஒரு தரப்பு சொல்கிறது. வீட்டில் உள்ள குப்பைகளை கொட்ட முள் செடி பக்கம் சென்றிருந்தார் என்று மற்றொரு செய்தி வருகிறது.
மேலும், அந்த பகுதியில் ஒரு மர ஆலை இருக்கிறதாம்.. அந்த ஆலைக்கு செல்வதாக சொல்லிவிட்டுதான் சிறுமி வீட்டில் இருந்து கிளம்பியதாகவும் சொல்கிறார்கள்.. மர ஆலையில் வேலை பார்க்கும் சிலருடன் சிலர் சிறுமி சகஜமாக பேசிவந்திருக்கிறார். இப்படி சிறுமி வீட்டை விட்டு எதற்காக வெளியே வந்தார் என்பதைதான் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்காக அந்த மர ஆலையில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.. ஆனால், அந்த குறிப்பிட்ட நேரத்தில் பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
மதியம் வீட்டை விட்டு போன சிறுமி, ரொம்ப நேரமாகியும் திரும்பி வரவே இல்லை.. வீட்டினர் சந்தேகமடைந்து சிறுமியை தேடி சென்றபோதுதான், கருகி கிடந்ததாக தகவல் வந்துள்ளது.. உடனடியாக போலீசார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றினர்.. அந்த பெண் குழந்தையின் சடலம் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்தது. சிறுமியின் அடையாளம் கூட உடனே தெரியவில்லை.
இந்த சம்பவம் மதியம் 3 மணி முதல் 5 மணி வரைக்குள் நடைபெற்றிருக்க கூடும் என்கிறார்கள் இதையடுத்துதான் விசாரணை துரிதமானது.. சம்பவ இடத்தில் போலீசார் குவிந்தனர்.. அந்த பகுதிக்கு வனந்த மொத்த செல்போன் சிக்னல்களையும் ஆய்வு செய்ய ஆரம்பித்தனர்..எத்தனை பேர் சேர்ந்து இந்த காரியத்தை செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் விரைவில் கொலையாளியை பிடித்துவிடுவோம் என்று டிஐஜி ஆனி விஜயா உறுதி தெரிவித்துள்ளார்.
என்எல்சி அனல்மின்நிலைய பாய்லர் வெடி விபத்து - உயிரிந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
ஆனி விஜயா பதவியேற்று 2 நாள்தான் ஆகிறது.. பெண்கள், குழந்தைகள் யாராக இருந்தாலும, எந்த பிரச்சனையாக இருந்தாலும் தயங்காமல் உங்கள் புகார்களை எங்களிடம் சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துதான், தன் பொறுப்பையே ஏற்று கொண்டார். இந்நிலையில், இப்படி ஒரு சம்பவ.ம் நடந்துள்ளது திருச்சி மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது.
கொலையாளிகளை பிடிக்க 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. 10-க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி, பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? அல்லது குடும்ப பகையால் எரித்து கொன்றார்களா என்று தெரியவில்லை. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் இதை பற்றி முழு உண்மை தெரியவரும். இப்போதைக்கு சம்பவம் நடந்த இடத்தில் மேற்கொண்ட சோதனையில், சிறுமியின் சடலம் அருகே தீப்பெட்டி, மண்ணெண்ணெய் கேன் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உடல் கிடப்பதாக அடையாளம் காட்டியது உறவினர்கள்தானாம்.. அந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... சிறுமியின் உடல் கிடந்தது இவர்களுக்கு மட்டும் எப்படி தெரியும் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. சிறுமி உயிரிழந்த இடத்தில் நிறைய பேர் வழக்கமாக வந்து தண்ணி அடிப்பார்களாம்.. அதேபோல, வேறு எங்காவது சிறுமியை கொன்று எரித்துவிட்டு, இங்கு வந்து சடலத்தை வீசி சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதைதவிர வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.. கடந்த 3 மாத காலமாக அண்ணன் உறவுமுறை கொண்ட செந்தில் என்பவரிடம் செல்போனில்பேசி வந்தாராம் சிறுமி.. இதை சிறுமியின் தந்தை பெரியசாமி கண்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. செந்தில் பெயரை தன் நோட்டு புத்தகத்திலும் எழுதி வைத்திருந்தாராம்.. அதன் அடிப்படையில் செந்திலிடமும் விசாரணை நடக்கிறது.. ஆனால் இதுவரை சிறுமி, எதனால், யாரால், எப்படி கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் அங்கேயே போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். இன்று காலை திருச்சி அரசு மருத்துவமனையில், 3 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் போஸ்ட் மார்ட்டம் செய்தனர். இந்த போஸ்ட் மார்ட்டத்தை வீடியோவாகவும் போலீசார் பதிவு செய்தனர். இறுதியில், சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளனர். அப்படி என்றால், சிறுமியை யார், எதற்காக, இவ்வளவு கொடூரமாக கொலை செய்ய வேண்டும் என்ற விசாரணை துரிதமாக நடந்து வருகிறது.
இதனிடையே, சிறுமி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கி உள்ளது.. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை 6 தொடர் பாலியல் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.. எனவே பாலியல் தாக்குதல் தொடர்பாக 6வது முறையாக தாமாக முன்வந்து விசாரணையை துவக்கியது ஆணையம்.