திருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது
திருச்சி: திருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த வழக்கில் அவரது உறவினர் செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நெய்தலூர் காலனியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது 2 ஆவது மகள் கங்கா தேவி (14) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 6ம் தேதி ( திங்கள்கிழமை) அன்று மதியம் சக தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அவர் இயற்கை உபாதை கழிக்க காட்டுப் பகுதிக்கு செல்வதாக வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றார்.
நீண்ட நேரமாகியும் கங்காதேவி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தாய் காட்டுப்பகுதியில் தேடி வந்துள்ளார். அப்போது அங்குள்ள அடர்ந்த கருவேலமுள் பகுதியில் பாதி உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கங்காதேவியின் தாய் கூச்சலிடும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் நிகழ்விடத்தில் திரண்டனர். இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தமிழகத்தில் சூப்பர் மாற்றம் .. பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் அதிகம்.. மாவட்ட வாரியாக லிஸ்ட்
சம்பவ இடத்திற்கு வந்த மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராமன், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டனர். சிறுமியின் உடல் கிடப்பதாக அடையாளம் காட்டிய உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மரணமடைந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
இந்நிலையில் சிறுமி உயிரிழந்த வழக்கில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் உறவினர் செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.