இனிமேல் நோ "சாமியோவ்".. ஒன்லி "கமல் டாக்டர்".. "குஷ்பு டீச்சர்"தான்.. மாற்றத்தை நோக்கி நரிகுறவர்கள்
நரிக்குறவர்களின் பிள்ளைகள் ஆர்வத்துடன் கல்வி கற்று வருகிறார்கள்
திருச்சி: நரிக்குறவர்கள்!!! மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு காரணமாகவும், இதர குடிமக்களோடு பழகுவதில் பெரிய சிக்கல் ஏற்படுவதாலும், சமுதாயத்தில் வேறு யாருடனும் கலவாமல் தனித்தே வாழத்தொடங்கியவர்கள்!
நரிக்குறவர்களில் பெண்கள் வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். நெறிமுறை, வரைமுறை அறியாதவர்கள்.
எந்த சூழ்நிலையிலும் இவர்கள் திருடுவதோ, பொய் சொல்வதோ கிடையாது என்பதையும் நாம் கேள்விப்பட்டதுண்டு. அதுமட்டுமல்ல.. இன்றுவரை இவர்கள் யாரையுமே சுரண்டாமல் கடினமாக உழைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஒருவராலும் மறுக்க முடியாது.
நாகரீகம்
இவர்களிடம் குற்ற செயல்கள் குறைவுதான்.. காலங்காலமாக ஊசி மணி, பாசி மணி விற்று கொண்டிருந்த இந்த சமுதாயத்தினர் மெல்ல மெல்ல நாகரீகத்தின் பக்கம் இப்போதுதான் திரும்பி பொதுமக்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்துள்ளனர்.. தாங்கள் பட்ட கஷ்டம் போதும்.. இனி நம் பிள்ளைகளாவது நன்றாக படிக்கட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆம்.. அதற்கு ஒரு உதாரணம்தான் இந்த திருச்சி சம்பவம்!
சினிமா
திருச்சி அருகே பொன்மலைப்பட்டியில் உள்ளது டிஇஎல்சி தொடக்கப்பள்ளி... இங்கு நரிக்குறவர் காலனியை சேர்ந்த 26 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள்.. அதற்கான சூழலும் நிர்ப்பந்தமும் அமையாதவர்கள்.. சினிமாவில் வரும் நடிகர், நடிகர்களை "ஆ"வென வாயை பிளந்து பார்ப்பார்கள். அதன்மீதுள்ள மோகத்தினால், தங்களது குழந்தைகளுக்கும் நடிகர், நடிகைகளின் பெயர்களை வைத்துள்ளனர்.
கமல் - குஷ்பூ
அந்த வகையில் இந்த மாணவரில் ஒரு பெற்றோர் பெயர் ரஜினி-கவுதமி... இன்னொரு மாணவனின் பெற்றோர் பெயர் கமல் - குஷ்பூ!! நாளெல்லாம் உழைத்து களைத்த இந்த மக்களுக்கு சினிமா ஒன்றுதான் பொழுதுபோக்கு.. வேலைவிட்டால் சினிமா என்றே வாழ்க்கையை ஓட்டிய நரிக்குறவ மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கார்த்திக், கவுதம் என்று பெயர் வைத்துள்ளனர்.. இவர்களில் ஒரு பெண் என்ஜினீயரிங் படித்துள்ளார் என்பது நிதர்சனம்!
மரியாதை
முயற்சி எடுத்து படித்தால் மரியாதை தானாக வந்து சேரும் என்பதை கண்கூடாக இவர்கள் பார்த்துவிட்டனர்.. அதனால்தான், ஸ்கூலுக்கு தேடி வந்து தங்கள் பிள்ளைகளை சேர்த்து விட ஆரம்பித்துள்ளனர்.. இதைதவிர சுகந்தி டெய்சி ராணி என்ற ஆசிரியை கடந்த 2 வருடங்களாக அப்பகுதிக்கு நேரில் சென்று பிள்ளைகளை அழைத்து பாடம் சொல்லி தரும் வேலையும் நடக்க ஆரம்பித்துள்ளது.
படிப்பில் ஆர்வம்
தேவராயனேரி காலனியில் மட்டும் கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படிக்கிற வயதில் உள்ள பிள்ளைகள்தான்.. இவர்கள் பள்ளிக்கூட வாசலை ஆயிரம் கனவுகளுடன் மிதித்துள்ளனர்.. அதே சமயம் ஆர்வத்துடன் படிக்க சென்றாலும், கிளாஸ் ரூமில் கடைசி பெஞ்சில் இவர்களை உட்கார வைத்து விடுகிறார்களாம்.
உறவுமுறைகள்
ஆனால் பொன்மலைப்பட்டி ஸ்கூலில் இப்படி ஒரு வித்தியாசத்தை பார்க்க முடியாது.. எல்லோருமே ஒன்றுதான்.. சமமாக உட்கார்ந்து படிக்கிறார்கள்... இன்னும் சொல்லப்போனால் இவர்களின் எண்ணிக்கை கிளாஸ் ரூமில் அதிகமாகிவிட்டது.. அதனால் நண்பர்களைவிட இவர்களுக்கு உறவுமுறைகள்தான் அதிகம் உள்ளது.. எந்த பக்கம் திரும்பினாலும், அண்ணன், அக்கா, தம்பி, தங்கை உறவுகளை கிளாஸ் ரூமிலேயே கூப்பிட்டு கொள்வதை பார்க்க முடிகிறது.
விழிப்புணர்வு பிரச்சாரம்
படிப்பிலும் கலக்குகிறார்கள் இந்த பிள்ளைகள்.. இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், சமீபத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் தடை பற்றின விழிப்புணர்வு நிகழ்ச்சியை நரிக்குறவர் காலனி மாணவ - மாணவிகள் பங்கேற்று நடத்தி உள்ளனர்... பொதுமக்கள் இதை பார்த்து அப்படியே நெகிழ்ச்சியில் உறைந்து விட்டனர்.. பிறகு மூலிகை செடிகள் வளர்த்து இயற்கையோடு வாழ்வோம் என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தி மக்களின் பாராட்டை நேரடியாக பெற்றனர்.
சபதம்
இவர்கள் முன்னோர்கள் படாத கஷ்டம் இல்லை.. காடு, மேடுகளில்.. இடுப்பிலும் முதுகிலும் குழந்தைகளை மடியில் கட்டி பிழைப்பு நடத்தினர்.. தெருவோரங்களில் குப்பை, சாக்கடை வாசத்துடன் பொழுதுகளை கழித்தவர்கள்.. சுக-துக்கங்களை கூடாரங்களுக்குள்ளேயே பங்கு போட்டுக் கொண்டவர்கள்.. ஊசி, பாசி மணி விற்க சென்றுவந்த நிலையில்.. இன்று அவர்களின் குழந்தைகள் புத்தக பையுடன் ஸ்கூலுக்கு நடைபோட்டு வரும் புதிய பாதை பதியப்பட்டுள்ளது.. "இனி நாங்கள் படித்து டாக்டர் ஆவோம்.. கலெக்டர் ஆவோம்.. டீச்சர் ஆவோம்.. ஆனால் ஊசிமணி, பாசி மணி மட்டும் விற்க மாட்டோம்" என்று சபதம் போட்டு சொல்கிறார்கள் இந்த குழந்தைகள்!
வாழ்த்துக்கள்... இதுதான் நம் ஆசையும்.. இனி எங்குமே கேட்க கூடாது "சாமியோவ்" என்ற ஏக்க சத்தம்!