கொரோனா முன்னெச்சரிக்கை.. இன்று இரவு முதல் 50 பகுதிகள் முழுமையாக அடைக்கப்படும்: திருச்சி கலெக்டர்
திருச்சி: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் இருப்பிடங்களை சுற்றியுள்ள மொத்தமாக 50 பகுதிகள் முற்றிலுமாக இன்று இரவு முதல் அடைக்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்று திரும்பியதில், திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாகவும், அதில் 36 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை.
மாவட்ட ஆட்சியர் சிவராசு இதுதொடர்பாக இன்று அளித்த பேட்டி: திருச்சி மாவட்டத்தில் 50 இடங்கள் இன்று இரவு முதல் முழுமையாக அடைக்கப்படும். மாவட்டத்தில் கொரோனா தொற்று 17 பேருக்கு உறுதி செய்யப்பட்ட்டுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் 125 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதில், 120 பேர் திருச்சி மாவட்டத்தையும் மீதமுள்ள 5 பேர் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதில்,ஈரோட்டை சேர்ந்த ஒருவருக்கும் கரூரை சேர்ந்த 2 பேருக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 120 பேரில் 117 பேர் டெல்லி சென்று திரும்பியுள்ளனர். அவர்களில் 53 நபர்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில், இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 பேருக்கு தொற்று இல்லை.
இப்படி மட்டும் இருந்தா போதும்.. எந்த ஊர்லயும் கொரோனா எட்டிப் பார்க்காது.. மலைக்க வைத்த மலை நகரம்!
திருச்சி மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் இருப்பிடங்களை சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலுமாக இன்று இரவு முதல் அடைக்கப்பட உள்ளன. இதில் மொத்தமாக 50 பகுதிகள் உள்ளன.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 25,586 குடியிருப்புகளில் 1,13,947 நபர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் ஊரடங்கை முழுமையாக பின்பற்றவில்லை. நாளை முதல் அத்தியாவசியமான காரணங்கள் இன்றி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, புறத்தாக்குடி, முசிறி, கரட்டாம்பட்டி, உறையூர் பாக்குபேட்டை, தில்லைநகர், ரஹ்மானியாபுரம், உறையூர், பாளையம் பஜார், பீமநகர், அண்ணா நகர், புத்தாநத்தம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், தென்னூர் ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதி, அண்டகொண்டான், சமயபுரம் கூத்தூர், துவாக்குடி மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில் ஏற்கனவே துபாயில் இருந்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரோடு சேர்த்து திருச்சியில் மட்டும் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது இவ்வாறு அவர் கூறினார்.