நிர்மலா சீதாராமன் திருச்சிதான்.. என்ன புண்ணியம்.. ஒரு பயனும் இல்லை.. அதிமுக எம்பி குமுறல்!
திருச்சி: நிர்மலா சீதாராமன் திருச்சியைச் சேர்ந்தவர்தான். மத்திய அமைச்சராகவும் இருக்கிறார். ஆனாலும் பாஜக அரசு துரோகம்தான் செய்து வருகிறது. நமக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று திருச்சி அதிமுக எம்.பி. ப. குமார் கூறியுள்ளார்.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை திரு.வி.க. திடலில் நேற்று இரவு அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவில் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் 110 பேருக்கு 'ஸ்மார்ட்' செல்போன்களை மாநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் எம்.பி. வழங்கினார்.
திருச்சியில் கட்சி நிர்வாகிகளுக்கு 'ஸ்மார்ட்' செல்போன் வழங்கி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை அ.தி.மு.க. தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் குமார் பேசியதாவது:
எம்ஜிஆரால் உருவாக்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுகவை ஒரு குடும்பத்தினரின் சூழ்ச்சியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மீட்டு, சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவும் தமிழகத்துக்கு ஆதரவாக இல்லை. அதனால் தான், 2014-ல் ஜெயலலிதா அதிமுகவை தனியாக போட்டியிட வைத்து, 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்தியாவின் 3ஆவது தனிப்பெரும் கட்சியாக்கினார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்த தேர்தலை சவாலாக ஏற்று எதிர்கொள்ள வேண்டும். தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். திருச்சி தொகுதியில் யாரை கட்சித் தலைமை வேட்பாளராக அறிவித்தாலும், ஹாட்ரிக் வெற்றி பெறும் வகையில் கட்சியினர் பணியாற்ற வேண்டும்.
இன்றைய காலத்தில் தொலைத் தொடர்பு மிக அவசியமாகி வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் அதிகளவில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது. எனவே கட்சி நிர்வாகிகள் கட்சிப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, முதல்கட்டமாக மாநகர் மாவட்டத்துக்குள்பட்ட 112 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. விரைவில் பூத்கமிட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் வழங்கப்படும் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை சமூக ஊடகங்களில் விளக்கி பிரசாரம் செய்வதற்காக தான் நிர்வாகிகள் 'ஸ்மார்ட்' செல்போன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தேர்தல் பிரசாரத்தின் தொடக்கம் தான். அடுத்த கட்டமாக பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ஸ்மார்ட் போன் வழங்கப்படும்.
திருச்சி விமான நிலைய விரிவாக்கம், அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலத்திற்கு தேவையான ராணுவ இடங்களை கேட்டு நாம் போராடி வருகிறோம். ஆனால் காங்கிரஸ் அரசு என்ன நிலைப்பாட்டில் இருந்ததோ அதே நிலையில் தான் மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு திருச்சிக்கு துரோகம் செய்து வருகிறது. திருச்சியை சேர்ந்த நிர்மலா சீதாராமன் மத்திய ராணுவ அமைச்சராக இருந்தாலும் நமக்கு உதவி செய்யவில்லை. இதனால் திருச்சியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது என்றார் அவர்.