'ஹெல்மெட்' போடாத ஆட்டோ டிரைவருக்கு ரூ100 அபராதம் போட்ட அடேங்கப்பா திருச்சி போலீஸ்
திருச்சி: திருச்சி தில்லைநகர் போலீசார் ஆட்டோ டிரைவருக்கு ஹெல்மெட் அணியாததால் 100 ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்ட சம்பவம் ஆட்டோ டிரைவர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (32). இவர் கடந்த பத்து வருட காலமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில்தான் திருச்சியிலிருந்து தில்லைநகர் வழியாக பயணி ஒருவரை ஏற்றி கொண்டு கடந்த 6ம் தேதி செல்லும்போது பயணியை இறக்கிவிட்டு செல்போனை பார்த்த போது திருச்சி மாநகர காவல்துறையின் மெசேஜ் வந்துள்ளது.
திறந்து பார்த்ததில் ஹெல்மட் போடாததற்கு பைன் விதித்ததால் ஆட்டோ டிரைவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது சம்பந்தமாக ஆட்டோ டிரைவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்.... "திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ஆட்டோ டிரைவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே வண்டி எண்ணை குறித்து வைத்து போலீசார் வாரம் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.
மேலும், தங்களுடைய வருமானத்தில் இருந்து தினமும் 100 ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் எங்களுடைய குடும்பங்கள் அவதி படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் அவர் ஆட்டோவில் செல்லும் போது தலைகவசம் அணியவில்லை என ஆட்டோ எண்னை குறித்து அபராதம் விதித்துள்ளதால்., தற்போது ஆட்டோவில் ஹெல்மெட் அணிய வேண்டுமா? தமிழக அரசு ஏதும் சட்டம் இயற்றி உள்ளதா என்று மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.