திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளை விவகாரம்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த கில்லாடி முருகன் விரைவில் கைது
திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லர்ஸில் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் 14 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதனால் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் விரைவில் கைதாகிவிடுவார் என தெரிகிறது.
திருச்சியில் உள்ள பிரம்மாண்டமான லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் கடந்த 2-ஆம் தேதி அதிகாலை சுவரில் ஓட்டை போட்ட திருடர்கள் அங்கிருந்த 30 கிலோ தங்க நகைகளை அள்ளிச் சென்றனர்.
கடைக்குள் விலங்குகளின் முகமுடியுடன் நுழைந்த மர்ம நபர்கள் குறித்து கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு சவால் ஏற்பட்டது. இதையடுத்து திருவாரூரில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் மணிகண்டன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நகைக் கடையில் கொள்ளையடித்தது தெரியவந்தது.
சுரேஷ் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து சுரேஷின் தாயார் கனகவல்லி ஆகியோரை கைது செய்தனர். மணிகண்டன், சுரேஷ் ஆகியோர் முக்கிய குற்றவாளியான முருகனின் உறவினர்கள். இந்த நிலையில் இன்று மூன்றாவதாக முரளி என்பவரை கைது செய்தனர்.
அவர் முருகனின் அண்ணன் மகனாவார். திருச்சி கே கே நகர் காவல் மண்டபத்தில் வைத்து போலீஸார் 14 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.