அம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை!
கொள்ளையர்கள் பிடிபட்டதால், 2 போலீசார் நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளனர்
திருச்சி: எல்லாம் நல்லாபடியா முடிஞ்சா மொட்டை அடிச்சிக்கிறதா வேண்டிக்கிட்டாங்க.. அதான் அம்மா.. தாயே.. மாரியாத்தா என்று சொல்லி ஆளுக்கு ஒரு மொட்டையை போட்டு, நேர்த்திகடன் செய்து விட்டு வந்துள்ளனர் போலீசார்!
9 மாசத்துக்கு முன்பு அதாவது கடந்த ஜனவரி 28ஆம் தேதியன்று, திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடந்தது. யார் கொள்ளை அடித்தார்கள் என்று தெரியவே இல்லை.

அந்த பேங்கின் சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே வந்த கொள்ளையர்கள், 470 பவுன் தங்க நகைகளும், ரூ.19 லட்சத்தையும், அள்ளி சென்றனர். இது சம்பந்தமாக போலீசார் எத்தனையோ வழிகளில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
4 தனிப்படை அமைக்கப்பட்டு, சுமார் 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இதனால் தனிப்படையை சேர்ந்த தலைமை காவலர் விஜயகுமார், மற்றும் காவலர் ஹரிஹரன் இருவரும், கொள்ளையர்கள் சிக்கினால் முடி காணிக்கை கொடுப்பதாக வேண்டிக் கொண்டனர்.
இப்போது 9 மாசத்துக்கு பிறகு கொள்ளையர்களை திருச்சி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். லலிதா ஜுவல்லரி கொள்ளையில் ஈடுபட்டவர்கள்தான், இந்த வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கு சுவரில் போட்ட ஓட்டை, மாஸ்க், என எல்லாமே ஒரே மாதிரி கொள்ளையாக தெரிந்ததே முக்கிய காரணம்.
சுரேஷ், முருகன், வெல்டர் ராதாகிருஷ்ணன் இவர்கள்தான் அந்த கொள்ளையர்கள் என்பதால் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அதனால்தான் இந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்த உடனேயே, ஹரிஹரன், விஜயகுமாரும் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்த கிளம்பி விட்டனர், விஜயகுமார் ஒப்பிலியப்பன் கோயிலிலும், ஹரிஹரன் சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் மொட்டை அடித்து வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications