திருச்சி மக்களே.. போலீஸ் இல்லைன்னு வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. டிரோன் மூலம் கண்காணிக்குது போலீஸ்
திருச்சி: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் நேற்று முதல் டிரோன் மூலம் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கவும், அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தடை உத்தரவை தீவிரமாக செயல்படுத்துவதற்காகவும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் 14 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 12 வாகனங்கள் மூலம் மேற்படி வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து சுழற்சி முறையில் காவலா்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தொடா்ச்சியாக விழிப்புணா்வு செய்து வருகின்றனா்.
மேலும், திருச்சி மாநகரில் உள்ள 4 காவல் சரகங்களிலும் உள்ள அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகர காவல்துறை முடிவு செய்தது. அதன்படி ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் கோட்டை, விமானநிலையம், பொன்மலை ஆகிய பகுதிகளில் கட்டுபாட்டு மையம் அமைக்கப்பட்டது.
அதைதொடா்ந்து சனிக்கிழமை காலை முதல் அந்தந்த பகுதிகளில் டிரோன் கேமராக்களை பறக்கவிட்டு அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிபவா்களை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது தேவையில்லாமல் சுற்றி திரிந்த நபா்களை கண்டறிந்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா்.
Recommended Video
எனவே, அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிபவா்களை கண்காணித்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.