சமயபுரம் அருகே வங்கி லாக்கர் கொள்ளை.. நைட் ரவுண்ட்ஸ் போகத் தவறிய காவலர் இடமாற்றம்
திருச்சி: திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாக்கரை கொள்ளையர்கள் உடைத்த சம்பவத்தில், சம்பவ நாளன்று இரவு ரோந்து செல்லத் தவறிய காவலரை இடமாற்றம் செய்துள்ளனர்.
சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி, நெ 1 டோல்கேட்டில் உள்ளது. இந்த வங்கியில், நெ.1 டோல்கேட், பிச்சாண்டார்கோவில், மாருதிநகர், தாளக்குடி, வாளாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் தனியார் கம்பெனி நிர்வாகிகள் வரவு-செலவு வைத்துள்ளனர்.
விவசாயிகளும் விவசாயத் தேவைகளுக்கான பொருட்களை வாங்க, வங்கியில் நகைகளை வைத்து நகைக்கடன் பெறுவது வழக்கம்.அந்த வகையில் கோடிக் கணக்கில் வங்கிப் பரிவர்த்தனைகள் நடைப்பெற்று வரும் மிக முக்கியமான வங்கியாக சமயபுரம் மக்களுக்கு இந்த வங்கி இருந்து வருகிறது.
உடைக்கப்பட்டது பெட்டகம்
இங்கு தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதியும் உள்ளது. தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், தனியார் கம்பெனி முதலாளிகள் பலர் பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு பெட்டகங்களில் நகைகள், சொத்து பத்திரங்கள், ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களையும் வைத்துள்ளனர். கடந்த 25-ந் தேதி வெள்ளிக் கிழமை பணி முடிந்து அன்று மாலை வங்கியை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். 26-ந் தேதி சனிக்கிழமை குடியரசு தின விடுமுறை என்பதாலும், 27-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதாலும், 2 நாட்கள் வங்கி செயல்படவில்லை. அதற்கு அடுத்தநாளான 28-ந் தேதி காலை வங்கியை திறக்க ஊழியர்கள் வந்தனர்.
சிலிண்டர் வெல்டிங்
அப்போது வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பின்பக்க சுவரில் மர்ம நபர்கள் துளையிட்டு அதன் வழியாக உள்ளே புகுந்து அங்கிருந்த 39, 114, 223, 299, 300 ஆகிய 5 பெட்டகங்களை மட்டும் கியாஸ் சிலிண்டர், வெல்டிங் எந்திரம் உதவியுடன் உடைத்து அதில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மற்றும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதல் கட்ட விசாரணை நடத்தினர்.
தவற விட்ட நகைகள்
இந்த கொள்ளை சம்பவம் குறித்து 2-வது நாளாக கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வங்கியின் பின்புறம் உள்ள தனியார் பள்ளி சுற்றுச்சுவர் அருகே வங்கியில் இருந்து கொள்ளையடித்து விட்டு சென்றபோது மர்ம நபர்கள் தவறி விட்ட ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு கரும்சிவப்பு நிறம் கொண்ட பெட்டி ஒன்று கிடந்ததை கண்டெடுத்தனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் சம்பவ இடத்துக்கு வந்து நகை, பணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விசாரணையில், அந்த பணம் மற்றும் பெட்டி தாளக்குடி பகுதியை சேர்ந்த ஒரு வாடிக்கையாளருக்கு சொந்தமானது என்பதும், அந்த பெட்டியில் தங்க கட்டிகள், தங்க நகைகள் 40 பவுன் வரை இருந்ததும் தெரிய வந்தது.
சோகத்தில் வாடிக்கையாளர்கள்
இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் வங்கி ஊழியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே கொள்ளை நடந்த வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நேற்று வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களது பாதுகாப்பு பெட்டகங்களை பார்வையிட்டதோடு அவர்களில் ஒருசிலர் பெட்டகத்தில் வைத்திருந்த பணம், நகைகள் மற்றும் ஆவணங்களை வீட்டிற்கு எடுத்து சென்றனர்.
வாடிக்கையாளர்களையே சாரும்!
சமயபுரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை நடந்த அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லாத காவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்நிலைய எழுத்தர் சகாயராஜை ஆயுதபடைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வங்கி ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, வங்கியில் அமைக்கப்பட்டிருக்கும் தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதியானது வருடாந்திர வாடகையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகையால், பாதுகாப்பு பெட்டகத்தின் முழு பொறுப்பும் வாடிக்கையாளர்களையே சாரும். இருப்பினும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கியின் மண்டல உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.