திருச்சி ரயில்வேயில் அதிக அளவு வட மாநிலத்தவர் நியமனம்.. 528 பேரில் 53 பேர் மட்டுமே தமிழர்கள்
திருச்சி: திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட 528 பேரில் 53 பேர் மட்டுமே தமிழர்கள் என்ற விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தமிழக தொலைக்காட்சி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . அந்த செய்தியில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 உதவியாளர் குரூப் டி பணியிடங்களுக்கு அண்மையில் ரயில்வே பணியாளர் வாரியம் தேர்வு நடத்தியது. இதில் மொத்தம் 528 பேர் இரண்டு நாள்களுக்கு முன்பு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 475 பேர் வெளிமாநிலத்தவர் என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 53 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட 90 சதவீதம் பேரில் பலர் பீகார், மத்திய பிரதேசம். உத்தரப்பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
திசை திருப்பல் தந்திரம்.. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்லும் பலே தலைவர்கள்
மதுரையை தொடர்ந்து திருச்சி ரயில்வே கோட்டத்திலும், அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
தமிழக ரயில்வே பணியிடங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி கோட்ட ரயில்வேயில் 90 சதவீதம் பணியிடங்களுக்கு வடமாநிலத்தவரே சேர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.