பருவ மழையை வரவேற்க தடபுடலாக தயாராகும் திருச்சி.. 1 லட்சம் மரக்கன்றுகளை நட சபாஷ் திட்டம்!
திருச்சி: திருச்சி மாநகரில் பருவமழைக் காலத்துக்கு முன்பே 1 லட்சம் மரக்கன்றுகளை நடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இந்திய அடுக்குமாடிக் குடியிருப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு(கிரடாய்) திருச்சி கிளையின் இளைஞர் பிரிவு தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், கட்டுமானத்துறையில் கிரடாய் அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது.
அதுமிட்டுமின்றி முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை புகுத்தக்கூடிய வகையில் கட்டுமானத் துறையை கொண்டு செல்ல வேண்டும். மேலும் சமூகப்பணிகள் மீதான அக்கறையும் அதிகரிக்க வேண்டும். இந்த அமைப்பு ஏழை மக்களின் மனிதாபிமான அமைப்பாக செயல்பட வேண்டும். புல்வாமா தாக்குலில் பலியான குடும்பங்களுக்கு வீடு கட்டித் தருவதன் மூலம் தேசபக்தி கொண்ட அமைப்பாகவும் மாறிவிட்டது.
இனிவரும் காலங்களில் புதிதாக கட்டப்படும் வீடுகள் பசுமை, மழைநீர் சேகரிப்பு, குப்பை சேகரிப்பு மையங்கள் கொண்டிருப்பது போன்று இருக்கும் வகையில்வடிவமைப்பை ஏற்படுத்த வேண்டும். புதை சாக்கடைத் திட்டம் ரூ. 650 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் முடிவடைந்தவுடன் 90 சதவிகிதப் பகுதிகளுக்கு புதை சாக்கடை வசதி கிடைத்துவிடும்.
பருவமழை காலத்திற்கு முன்னதாக 1 லட்சம் மரக்கன்றுகளை நடத்திட்டமிட்டுள்ளோம். மேலும் விளையாட்டு மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு கிரடாய் பங்களிப்பு மிக அவசியமானது இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் உயிர் நீத்த அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சிவச்சந்திரன் குடும்பத்துக்கு வீடு கட்ட ரூ.6 லட்சம் பங்களிப்புத் தொகை திருச்சி கிரடாய் சார்பில் வழங்கப்பட்டது.விழாவுக்கு கிரடாய் திருச்சி கிளைத் தலைவர் ந. ஆனந்த் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிரடாய் தலைவர் வி.கௌதம் கௌரவ விருந்தினராக பங்கேற்று பேசினார்.
துணைத்தலைவர் ஐ.ஷாஜஹான், செயலர் ஆர்.எஸ்.ரவி, பொருளாளர் ஆர். மனோகரன், முன்னாள் தலைவர் பி. செந்தில்குமார், இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் என்.முகமது இப்ராஹிம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.