ஹஜ் யாத்ரீகர்களுக்காக சிறப்பு உதவி மையம்... திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் ஏற்பாடு!
திருச்சி : ஹஜ் யாத்திரை செல்வோருக்கு உதவும் வகையில் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையம் நவ.11ஆம் தேதி வரை செயல்படும் என்று மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை செல்வோருக்கு பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வழங்குவதற்காக அந்தந்த மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்ல பதிவு செய்துள்ளோருக்கும் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்சிறப்பு உதவி மையம் மூலம் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெற முடியும். ஹஜ் பயணம் மேற்கொள்வோர் தங்களது பாஸ்போர்ட்டுகளை நவ.11ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஹஜ் கமிட்டிக் குழு அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் 2020 டிச.31ஆம் தேதி வரையில் பாஸ்போர்ட் பயன்பாட்டில் இருப்பதுடன், கணினி மூலம் பயன்படுத்தப்படத்தக்க எழுத்துகள் அச்சடிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
இந்நிலையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு திருச்சி மண்டல பாஸ்போர்ட் (மரக்கடை) அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணத்துக்காக பாஸ்போர்ட் விண்ணப்பித்து போலீஸ் விசாரணை முடித்து பாஸ்போர்ட் வரப்பெறாதவர்கள், இந்த பாஸ்போர்ட் உதவி மையத்தை அணுகலாம்.
ஹஜ் யாத்திரை குழுவில் பதிவு செய்தமைக்கு ஏதேனும் சான்று, பாஸ்போர்ட் விண்ணப்பித்த (ஏஆர்என்) ரசீது உள்ளிட்டவைகளுடன் உதவி மையத்தை அணுகலாம். இந்த மையம் நவ.11ஆம் தேதிவரை இயங்கும். இதுவரை பாஸ்போர்ட் விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பித்து உதவி மையத்தின் மூலம் பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.