லாக்டவுனால் திருச்சியில் வெறிச்சோடிய சாலைகள் - கொரோனா சிகிச்சையில் இருந்து 26 பேர் மீண்டனர்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஆறாவது முறையாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பரபரப்பாக காணப்படும் திருச்சி நகரம் வெறிச்சோடியுள்ளது.
திருச்சி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஆறாம் கட்ட லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருச்சி மாவட்டத்தில் 30 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பொதுப் போக்குவரத்து மீண்டும் முடங்கியுள்ளது.கொரேனா வைரஸ் பரவல் திருச்சியில் அதிகரித்து வரும் நிலையில் மீண்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து நம்பிக்கையை அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் பொதுப் போக்குவரத்து மார்ச் மாதம் முதல் தடை செய்யப்பட்டிருந்தது. 5ஆவது கட்டமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் சில தளர்வுகளுடன் இருந்தது. அரசுப் பேருந்துகளை மண்டலம் வாரியாகப் பிரித்து இயக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்தது. கடந்த ஜூன் 1 முதல் திருச்சி மாவட்டத்தில் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. ஜூன் 10 முதல் தனியார் பேருந்துகளும் இயங்கத் தொடங்கின. இதன்படி, மாவட்டத்திலிருந்து 180 நகரப் பேருந்துகள், 150 புகா்ப் பேருந்துகள் என மொத்தம் 330 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் இயங்கின.
பயணிகள் பின்பக்கப் படிக்கட்டுகள் மூலம் பேருந்தினுள் அனுமதிக்கப்பட்டனா். பயணிகளுக்கு கிருமிநாசினி கொடுக்கப்பட்டது. இயக்கப்பட்ட பேருந்துகளும் முக்கிய வழித்தடங்களில் மட்டும் இயக்கப்பட்டன. வெளியூா் பேருந்துகள் என்ற வகையில் திருச்சியிலிருந்து திருவாரூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டன. இதர பகுதிகளுக்குச் செல்லவில்லை. மாறாக அந்தந்த மாவட்டங்களின் எல்லைகளுக்கு முன்பாக திருச்சி மாவட்டத்தின் எல்லை மற்றும் 4ஆவது மண்டலத்துக்குள்பட்ட எல்லைப் பகுதிகள் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஜார்க்கண்ட் கொரோனா போர்க்களத்தில் தீரமுடன் பணியாற்றும் 42,000 'சாஹயாக்கள்'
லாக்டவுன் 6.0
இந்நிலையில், ஜூலை மாதம் முழுவதும் ஆறாம் கட்டமாக லாக்டவுனை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், பொதுப் போக்குவரத்துக்கு ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை தடை விதித்துள்ளது. இதையடுத்து, புதன்கிழமை காலை முதல் மாவட்டம் முழுவதும் பொதுப் போக்குவரத்து முடங்கியது.
முடங்கிய போக்குவரத்து
செவ்வாய்க்கிழமை மாலையே பெரும்பாலான பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்பட்டு அந்தந்தப் பகுதி பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. புதன்கிழமை அதிகாலை நகரப் பேருந்துகள், புகா்ப் பேருந்துகள் முழுமையாகப் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவை வெறிச்சோடின. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ரயில் போக்குவரத்தும் ஜூலை 15 வரை நிறுத்தப்பட்டுள்ளதால் ஜங்ஷன் ரயில் நிலையமும் வெறிச்சோடியது. ரயில் நிலையம் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
முடங்கிய மக்கள்
போக்குவரத்து முடங்கியுள்ளதால் தினக்கூலித் தொழிலாளா்கள், நகரப் பேருந்துகளை நம்பியே உள்ள பணியாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். கட்டுமானத் தொழிலாளா்கள் பலரும் தங்கள் பணியிடங்களுக்கு நடந்தே சென்றதைக் காண முடிந்தது. பேருந்துகள், ரயில்கள் இயங்காவிட்டாலும் இதர வாகனப் போக்குவரத்து அதிகரித்தே காணப்பட்டது. பணியிடங்களுக்கு பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் சென்றனா்.
கடைகள் திறப்பு
பேருந்துகள் இயங்காவிட்டாலும் ஆட்டோக்கள் ஓடியதால் பொதுமக்களின் ஏராளமானோர் ஆட்டோ சேவையைப் பயன்படுத்தினா். நகரப் பகுதிகளுக்குள் மருத்துவமனை மற்றும் அவசரத் தேவைக்காக செல்பவர்கள் பெரும்பாலும் ஆட்டோக்களை பயன்படுத்தினா். நான்கு சக்கர வாகனங்களும் அதிகளவில் காணப்பட்டன. ஹோட்டல்கள், மளிகை, காய்கனி கடைகள், பெட்டிக் கடைகள், வா்த்தக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின. பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டிருந்தாலும் சில தளா்வுகளும் உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படவில்லை.
டிஸ்சார்ஜ் எத்தனை பேர்
இதனிடையே திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 26 போ் குணமடைந்து புதன்கிழமை மாலை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
கொரோனா 701 பேர் பாதிப்பு
ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, திருச்சியில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 701ஆக அதிகரித்துள்ளது. திருச்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் திருச்சி மாநகராட்சி பகுதியையும், 16 பேர் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.