பழிக்கு பழி.. உதயநிதி ரசிகர் மன்ற பொறுப்பாளர் தலையை வெட்டி.. ஸ்டேஷனுக்கு கொண்டு சென்ற 3 பேர்
திருச்சியில் ரவுடியின் தலையை வெட்டிய 3 பேர் சரணடைந்துள்ளனர்
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரவுடி சந்திரமோகனை மிக கொடூரமாக கொலை செய்த 3 பேரும் போலீசில் சரண் அடைந்துள்ளனர்... அத்துடன் கையில் சந்துருவின் தலையையும் கொண்டு சென்று, ஏன் சந்துரு தலையை வெட்டினோம் என்று பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளனர்.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சந்திரமோகன்.. இவருக்கு 35 வயதாகிறது.. கல்யாணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். உதயநிதி ரசிகர் மன்றத்தில் பொறுப்பாளராக இருந்தவர்.. இவர் மீது ஏகப்பட்ட கொலை, திருட்டு, வழிப்பறி என 33-க்கும் மேற்பட்ட கேஸ்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
10 வருடங்களுக்கு முன்பு இவர் ஒரு பால்காரர் ஒருவரின் தலையை சந்துரு துண்டித்து எடுத்து விட்டார்.. அந்த தலையை போலீசாருக்கு தெரியாமல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மறைத்து வைத்திருந்தார். அன்று முதல் இவருக்கு தலைவெட்டி சந்திரமோகன் என்ற ஒரு பெயரும் உண்டு.. நிறைய முன்விரோதங்களும் சந்துருவுக்கு ஏற்பட்டுள்ளது.
மிரட்டல்
சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரை பின் தொடர்ந்து சென்று கொலை மிரட்டல் விடுத்தார்... இது தொடர்பான புகாரின் பேரில் சந்துருவை ஸ்ரீரங்கம் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், தேவிபாலா தியேட்டரில் இருந்து ரயில்வே மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது 3 பேர் ஒரு யுனோவா காரில் வந்து சந்துருவை வழிமறித்னர்.. கைகளில் அரிவாள், கத்தி உட்படபயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர்... அவர்களை கண்டதும் சந்துரு தப்பியோட முயன்றார்.
தலை துண்டிப்பு
ஆனாலும் 3 பேரும் விரட்டி பிடித்து.. வழிமறித்து.. சந்துருவை அங்கேயே சரமாரியாக வெட்டி கொன்றனர்.. அவரது தலையையும் தனியாக துண்டித்து கையில் எடுத்து கொண்டு ஸ்ரீரங்கம் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்தனர். சுரேஷ், சரவணவன், செல்வகுமார் ஆகியோர்தான் கொலை செய்த 3 பேரும் என தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அலறி ஓட்டம்
இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஊரடங்கு என்பதால் யாரும் ரோட்டில் இல்லை.. ஆனால் காய்கறிகாரர்கள் அந்த நேரத்தில் சென்று கொண்டிருந்தனர்.. இதை பார்த்தும் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. தலையுடன் 3 பேரும் ஸ்டேஷன் வருவதை பார்த்து போலீசாரும் அதிர்ந்தனர்.. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்துரு உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம்
கொலை செய்த 3 பேரும் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர்கள்.. இதில், சரவணன் ஒரு வழக்கில் சந்துருவுக்கு எதிராக சாட்சி சொல்ல இருந்தார். அதனால்தான் ஆத்திரமடைந்த சந்துரு சில நாட்களுக்கு முன்பு சரவணன் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டி உள்ளார்... இதனால் எந்நேரமும் சந்துரு தன்னை கொன்றுவிடுவாரோ என்று சரவணன் பயந்தபடியே இருந்திருக்கிறார்.
வாக்குமூலம்
அதனால் தன்னுடைய சகோதரன், உறவினரை அழைத்து கொண்டுதான் இன்று காலை இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அநேகமாக விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.. பட்டப்பகலில் உதயநிதி ரசிகர் மன்ற பொறுப்பாளரை கொன்று தலையை துண்டித்த சம்பவம் திருச்சியை உறைய வைத்து வருகிறது.