பழிக்கு பழி.. தலையில் இறங்கிய அரிவாள்.. பட்டப்பகலில் ரவுடி கொலை.. அதிர்ச்சியில் உறைந்த உறையூர்!
திருச்சியில் ரவுடி சரமாரி வெட்டி கொல்லப்பட்டார்
திருச்சி: மொத்தம் 8 பேர்.. சுற்றி வளைத்து கொண்டு புகழேந்தியை வெட்டி சாய்த்துள்ளனர்.. ரவுடிகளுக்குள் மோதல் ஏற்பட்டு, அதனால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.. பொதுமக்கள் கண் முன்னிலைலேயே பட்டப்பகலில் இந்த பயங்கரம் நடந்துள்ளது உறையூர் மக்களை உறைய வைத்துள்ளது.
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி.. இவர் ஒரு ரவுடி.. 28 வயதாகிறது.. போலீஸ் ஸ்டேஷன்களில் நிறைய வழக்குகள் இவர் மீது உள்ளன.
இந்த நிலையில் 2 மாதத்துக்கு முன்பு உறையூரில் ஜிம் மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் புகழேந்தி கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கும் போனார். சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார். அதனால் தினமும் தில்லைநகர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.
அதன்படி நேற்று கையெழுத்து போட்டுவிட்டு, பைக்கில் வீட்டிற்கு சென்றார். அப்போது வழியில் திடீரென 8 பேர் கொண்ட கும்பல் பதுங்கியிருந்து... புகழேந்தி மீது பாய்ந்தது.. அவர்கள் கையில் பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன.. அதை பார்த்து பதறி போன புகழேந்தி அதிர்ச்சி அடைந்து பைக்கை கீழே போட்டுவிட்டு.. உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினார்.
ஆனாலும் 8 பேரும் விரட்டி சென்று சுற்றி வளைத்து புகழேந்தியை அரிவாளாலேயே வெட்டி சாய்த்தனர்.. இதில் வெட்டு பலமாக விழுந்ததில், அரிவாள் புகழேந்தி தலைக்குள்ளேயே துளைத்து கொண்டு போய்விட்டது.. உடம்பெல்லாம் பல இடங்களில் அரிவாள் வெட்டுப்பட்டு, ரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்தார் புகழேந்தி.. 8 பேரும் உடனே தங்களது பைக்கை எடுத்து கொண்டு பறந்துவிட்டனர்.
பட்டப்பகலில்.. நடுரோட்டில் இந்த கொலை நடந்தது.. பொதுமக்கள் எல்லோருமே இதை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடினர்.. உறையூர் போலீசார் விரைந்து வந்து புகழேந்தி உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். வந்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை.
எனினும் ஜிம் மணி கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை செய்துள்ளார் என்று முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. தற்போது தப்பியோடிய அந்த 8 பேரை சிசிடிவி காட்சியை வைத்து, போலீசார் தேடி வருகிறார்கள்... உயிரிழந்த ஜிம் மணிகண்டன் கட்ட பஞ்சாயத்து நடத்தி வந்திருக்கிறார்.. அதில்தான் தகராறு வெடித்துள்ளதாக கூறப்படுகிறது..