நம்மை யாரும் பிரிக்கமுடியாது... பிரிக்க நினைத்தால் அது நடக்காது -அன்பில் மகேஷ்பொய்யாமொழி
திருச்சி: மதத்தால் நம்மை யாரும் பிரிக்க நினைக்கக் கூடாது என்றும், அவ்வாறு நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது எனவும் கூறுகிறார் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் மாவட்டம் தோறும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்ட நிலையில், எதற்காக கையெழுத்து பெறப்படுகிறது என்பதை பொதுமக்களிடம் விளக்கியுள்ளார் அன்பில் மகேஷ்.
நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கையெழுத்து இயக்கத்தை திருச்சி தெற்கு மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் இவர்.
திமுக பாணியை பின்பற்றும் அதிமுக... நிர்வாகிகளுக்கு சுதந்திரம் கொடுத்த ஓ.பி.எஸ்.
சுற்றி சுழன்றார்
திமுக இளைஞரணி துணை செயலாளராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கூடுதல் பொறுப்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவி கடந்த வாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து தனது நிர்வாகத்திற்குட்பட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் விசிட் அடித்து நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது இவர் சென்ற இடங்கள் அனைத்திலும் உற்சாக வரவேற்பு அளித்து அசத்தினர் இளைஞர்கள். இவர் மாவட்ட பொறுப்பாளராக பதவியேற்றவுடன் கையெழுத்து இயக்கத்தை நடத்திக்காட்ட வேண்டிய முதல் பணி இவருக்கு இருந்தது. அதனை அவர் வெற்றிகரமாக நடத்திக்காட்டி லட்சக்கணக்கான கையெழுத்துக்களை பெற்று திருச்சி மாவட்ட திமுக சீனியர்களை வியப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.
|
ஆர்வம்
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் பணிகளை இளைஞர்கள் தன்னார்வமாக வந்து செய்தனர். இதற்கு காரணம் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கனிவான பேச்சும் அவரது நடவடிக்கையும் தான். பதவியேற்ற ஒரே வாரத்தில் இளைஞர்களை அடையாளம் கண்டு உரிமையுடன் அவர் பெயர் சொல்லி அழைக்கத்தொடங்கிய விதம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கு முன்னர் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த நேரு, குறிப்பிட்ட நிர்வாகிகளிடம் மட்டுமே கம்யூனிகேஷன் செய்து வந்தார். ஆனால் அதை உடைத்தெறிந்து நிர்வாகிகளாக இல்லாமல் தொண்டர்களாக இருப்பவர்களை கூட அன்பில் மகேஷ் அரவணைக்க தொடங்கியுள்ளார்.
எதற்கு கையெழுத்து
திமுகவினர் மக்களை ஏமாற்றி கையெழுத்து வாங்குவதாகவும், பொதுமக்கள் அதனை நம்பி கையெழுத்திட வேண்டாம் எனவும் பாஜக, அதிமுக தரப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிலையில் எதற்காக திமுக கையெழுத்து பெறுகிறது, குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வெண்டும், கையெழுத்து இயக்கத்தின் அவசியம் என்ன என்பது பற்றியெல்லாம் ஆங்காங்கு தெருமுனை பிரச்சாரம் செய்தார் அன்பில் மகேஷ். இதற்கு இஸ்லாமியர்கள் தரப்பில் மட்டுமல்லாமல் இந்துக்கள், கிறிஸ்துவர்கள் தரப்பிலும் வரவேற்பு இருந்தது.
ஒற்றுமை
யார் எதைக் கூறினாலும் சரி தன்னை பொறுத்தவரை ரஹிமும் ஒன்றுதான், சீனிவாச ஐயங்காரும் ஒன்றுதான்,ஜோசப்பும் ஒன்றுதான், என்றும், அனைவரும் சகோதரத்துவமாக பழகி வரும் நிலையை யாரும் மாற்றக்கூடாது எனவும் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். ஒற்றுமையை குலைப்பதற்கான சிறு முயற்சியையும் முறியடிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.