திருச்சி அருகே 9-ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை.. பாலியல் தொந்தரவு செய்து கொலையா?
திருச்சி: திருச்சி அருகே காட்டுப் பகுதியில் 9-ஆம் வகுப்பு மாணவி இன்று எரித்துக் கொலை செய்யப்பட்டார். உடலை கைப்பற்றிய சோமரசம்பேட்டை போலீஸார், வழக்கு பதிவு செய்து, பாலியல் தொந்தரவு செய்து கொலையா என விசாரணை நடத்தி வருகிறார்கள். .சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா விசாரணை நடத்தினார்..
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நெய்தலூர் காலனியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது 2 ஆவது மகள் லட்சுமி (14)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று (திங்கள்கிழமை) மதியம் சக தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அவர் இயற்கை உபாதை கழிக்க காட்டுப் பகுதிக்கு செல்வதாக வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றார்.
நீண்ட நேரமாகியும் லட்சுமீ வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தாய் காட்டுப்பகுதியில் தேடி வந்துள்ளார். அப்போது அங்குள்ள அடர்ந்த கருவேலமுள் பகுதியில் பாதி உடல் எரிந்த நிலையில் இறந்துகிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
லட்சுமியின் தாய் கூச்சலிடும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் நிகழ்விடத்தில் திரண்டனர். இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸார் சிறுமி உடலை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க முயன்றனர்.
பல்கலை., கல்லூரிகளில் இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
இதைத் தொடர்ந்து திருச்சி சரக டி.ஜ.ஜி. ஆனி விஜயா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், காவல் துணை கண்காணிப்பாளர் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி கொலைக்கான காரணம் குறித்து தகவல் தெரியாத நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அண்மையில் புதுக்கோட்டை, ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திருச்சியில் ஒன்பதாம் வகுப்பு சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.