கர்ப்பமானதை கிண்டலடித்த எஸ்.ஐ.. கொசு மருந்தை குடித்த பெண் போலீஸ்!
திருச்சியில் விஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திருச்சி: பெண் போலீஸ் கர்ப்பமடைந்தது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கிண்டல் செய்ய போய்.. அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அந்த பெண்!!
ஜெயில் வார்டன் செந்தமிழ்செல்வி தற்கொலை விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்த ஒரு தற்கொலை முயற்சி நடந்துள்ளது திருச்சி மாவட்டத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஆயுதப்படை ஆபீசில் போலீசாக இருப்பவர் தாரணி. 22 வயதாகிறது. சமீபத்தில் தான் இவருக்கு கல்யாணம் நடந்தது. இப்போது அவர் கர்ப்பமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சப்-இன்ஸ்பெக்டர்
இந்நிலையில் உடம்பு சரியில்லாமல் போனதால் மெடிக்கல் லீவ் எடுத்துள்ளார். ஆனாலும் உடம்பு சீராகாததால், இன்னும் 4 நாட்களுக்கு லீவு எடுத்துள்ளார். பிறகு எல்லா லீவும் முடிந்து நேற்று ஆபீசுக்கு வந்திருக்கிறார். அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஏன் எக்ஸ்ட்ரா லீவு? என்று கேட்டிருக்கிறார். உடனே தாரணியும், கர்ப்பமடைந்தது குறித்தும், அதனால்தான் உடம்பு சரியில்லாமல் லீவு எடுத்துவிட்டதாகவும் சொன்னார்.
மன உளைச்சல்
கூடவே கொண்டு வந்திருந்த மெடிக்கல் சர்ட்டிபிகேட்டையும் காட்டினார். உடனே சப்-இன்ஸ்பெக்டர், தாரணி கர்ப்பம் அடைந்தது குறித்து கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது. இப்படி கர்ப்பத்தை வைத்து கேலி, கிண்டல் செய்ததும் தாரணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அங்கிருந்த கொசு மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கும் முயன்றதாக தெரிகிறது.
தீவிர சிகிச்சை
அந்த நேரம் பார்த்து, எதேச்சையாக இன்னொரு பெண் போலீஸ் தாரணி அறைக்கு சென்றார். அங்கே தாரணி வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தாரணியை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தாரணிக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
கலக்கத்தில் போலீஸ்
எதற்காக தாரணி தற்கொலை முயற்சி செய்தார் என்று திருச்சி கே.கே.நகர் போலீசார் விசாரணையை நடத்த துவங்கிய போதுதான் மேற்கண்ட விவரங்கள் எல்லாம் தெரியவந்தது. ஏதாவது ஒரு காரணத்திற்காக தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் தொடர்ந்து பெருகி வந்து கொண்டிருப்பது தமிழக போலீஸ் வட்டாரத்தையே கலக்கமடைய செய்து வருகிறது.