பட்டப்பகலில்.. இளம் பெண்ணை காரில் கடத்த முயற்சி.. விரட்டி பிடித்த கிராம மக்கள்
திருச்சி அருகே இளம்பெண்ணை காரில் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி: சாலையோரம் நின்று கொண்டிருந்த வாய் பேச முடியாத இளம்பெண்ணை காரில் கடத்தி செல்ல முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கவனித்த பொதுமக்களே ஓட ஓட அந்த நபரை விரட்டி பிடித்தனர்.
மணப்பாறையை அடுத்த நடுப்பட்டி அருகே உள்ள திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 25 மதிக்கத்தக்க ஒரு பெண் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அவர் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார்.
அப்போது, அங்கே ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒருவர் நின்றுகொண்டிருந்த பெண்ணை காரில் ஏற்றி கடத்தி சென்றார். இதை பார்த்த பொதுமக்கள், காரை விரட்டியபடியே ஓடினார்கள்
மடக்க பிடித்தனர்
இறுதியாக பொன்னம்பலம்பட்டி அருகே காரை மடக்கிப் பிடித்துவிட்டனர். காரிலிருந்து அந்த பெண்ணை மீட்ட அவர்கள், கடத்த முயன்ற நபரை பிடித்து வைத்து போலீசுக்கு தகவல் அளித்தனர். ஆனால் தகவல் அளித்தும் உடனடியாக வரவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் மேலும் ஆத்திரமடைந்த மக்கள், கிராம மக்கள் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலேயே மறியலில் ஈடுபட்டனர். இதன்பிறகுதான் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி, பிடித்து வைத்திருந்த அந்நபரையும் மீட்டு ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
திருச்சி இஸ்மாயில்
விசாரணையில் இளம்பெண்ணை கடத்தியவர், திருச்சியை இஸ்மாயில் 42, என்பதும், இவர்மீது பல போலீஸ் ஸ்டேஷன்களில் ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பரபரப்பு
எனினும் பட்டப்பகலியே நடுரோட்டில் இளம்பெண்ணை கடத்தி சென்றதும், அதனை பொதுமக்களே விரட்டி சென்று பிடித்ததும், அதனை தொடர்ந்து நடைபெற்ற மறியலும் என மணப்பாறையே ஒரே பரபரப்பாகிவிட்டது.