திருச்சி அருகே டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் மரணம்.. ஒருவர் உயிர் ஊசல்.. பகீர் பின்னணி
திருச்சி: திருச்சி அருகே டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் மரணம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள கண்ணனூரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் பாரும் செயல்பட்டு வருகிறது. இந்த பாருக்கு காலை 6.30மணிக்கு சென்ற சரவணன்(வயது 30), ரத்தினம் (55), சதீஷ் (30) ஆகியோர் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி குடித்திருக்கிறார்கள்.
இதில் மது அருந்திய 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக சுருண்டு விழுந்து கடும் வயிற்று வலியால் துடித்திருக்கிறார்கள். இதில் சரவணன் என்பவர் நிகழ்விடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.
மற்ற இரண்டு பேரையும் பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் ரத்தினம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். சதீஷை சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கண்ணனூர் டாஸ்மாக் மதுக்கடை பாரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதுடன் மதுவில் போதை அதிகம் ஏறுவதற்காக சில பொருட்கள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து பாரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
ஒரே ஆண்டில் பாஜகவின் வருமானம் 2 மடங்கும்.. காங்கிரஸின் வருமானம் 4.5 மடங்காகவும் உயர்வு
இந்த சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் பல டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக விடிய விடிய மது விற்பனை நடந்து வருவதாகவும் இதனால் அப்பாவி ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.