இப்படியா அசிங்கப்படுத்துவீங்க.. தலைகாட்ட முடியல.. வாட்ஸ்அப் புரளி.. கண்ணீர் விட்டு அழுத 2 பெண்கள்
வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரவியதால் 2 பெண்கள் புகார் மனு அளித்துள்ளனர்
Recommended Video
திருச்சி: "எங்களை பற்றி இப்படியா அசிங்கமா சொல்றது.. வீட்டை விட்டு வெளியேகூட போக முடியல.. வேலைக்கும் போக முடியல.. யாரும் இதை ஷேர் செய்யாதீங்க" என்று தங்களை பற்றி அவதூறு பரப்பின தகவலுக்காக 2 பெண்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை கோரி, 2 பெண்கள் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிராமம் பாச்சூர். இங்கு வசித்து வருபவர்கள் அனிதா, மோனிஷா. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. அனிதாவுக்கு 35 வயது.. மோனிஷாவுக்கு 33 வயது.
கூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை!
ஆடியோ
இவர்கள் 2 பேரும் தனியார் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்யும் ஏஜென்சி ஒன்றில் வேலை பார்க்கிறார்கள். அதாவது, வீடு, வீடாக சென்று அந்த பொருளை பற்றி எடுத்துக்கூறி மக்களிடம் விற்க வேண்டும். இதுதான் இவர்களது வேலை! இந்த நிலையில் அனிதா, மோனிஷாவின் போட்டோவும், ஒரு ஆடியோவும் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவ ஆரம்பித்தது. அனிதா, மோனிஷா 2 பேரும் ஒரு வீட்டின் படிக்கட்டில் உட்கார்ந்திருப்பது போல அந்த போட்டோ இருந்தது.
செல்போன்
"இந்த 2 பேரும் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. செல்போன் கேட்பது போல நடித்து, அந்த போனில் இருந்து வேறொரு செல்போன் எண்ணிற்கு ‘மிஸ்டு கால்' கொடுத்த பின், அந்த செல்போனில் உள்ள தகவல்கள் திருடுகிறார்கள்" என்று அந்த ஆடியோவில் விவரம் இருந்தது. அதனால்தான் இந்த செய்தி வைரலானது. இப்படி ஒரு விஷயமே லேட்டாகத்தான் இரு குடும்பத்தினருக்கும் தெரிந்தது.. இதை கேட்டு அதிர்ந்தனர்..!
அவதூறு
அந்த போட்டோவில் இருப்பது இவர்கள் இருவர்தான்.. திருச்சி திருவானைக்காவல் பகுதியில் பொருட்களை விற்பனை செய்துவிட்டு ஒரு வீட்டின் படிக்கட்டில் 2 பேரும் சிறிது நேரம் உட்கார்ந்துள்ளனர். அப்போது யாரோ ஒரு மர்ம நபர் இதை போட்டோவாக எடுத்துவிட்டு, அவதூறு செய்தியை பரப்பியது பின்புதான் தெரியவந்தது.
புகார் மனு
இதையடுத்து, வாட்ஸ்-அப்பில் தங்களை பற்றி அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அனிதா, மோனிஷா புகார் தெரிவித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதுடன், சைபர் கிரைம் போலீசாருக்கு புகாரை அனுப்பி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
வாழ்வாதாரம்
இதுகுறித்து அனிதா, மோனிஷா செய்தியாளர்களிடம் பேசும்போது, "சோஷியல் மீடியாவில் பரவிய இந்த அசிங்கமான தகவலால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வெளியேகூட போக முடியவில்லை. வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. வாட்ஸ்-அப்பில் மேலும் இந்த தகவல் வந்தால் அதனை யாரும் மற்றவர்களுக்கு ஷேர் செய்யாதீங்க.. மீறி பதிவிட்டால், அது தவறான தகவல் என மறு பதிவு செய்யுங்கள். இந்த ஆடியோவை பதிவு செய்து அனுப்பிய நபர், இந்த தகவல் தவறானது என மன்னிப்பு கேட்டு பதிவிட்டு அனுப்ப வேண்டும். அந்த நபரை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அழுதவாறே சொன்னார்கள்.