சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்க... ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த உதயநிதி
திருச்சி: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு தரவேண்டும் என கட்சி தலைமைக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் வைத்த இந்த கோரிக்கைக்கு மாநாட்டுத் திடலில் இருந்த இளைஞர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. நீண்ட நேரம் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திருச்சியில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு... வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
திருச்சி மாநாடு
திமுகவையும், திருச்சியையும் பிரிக்கமுடியாது என்பதற்கேற்ப திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. அதில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதுடன் எவ்வாறு செயல்படுவது என்பது பற்றியும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. திமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்டு தயார் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன. அந்த புத்தகத்தில் இடம்பெற்ற திட்டங்கள் பற்றி மக்களிடம் முறையாக எடுத்துச்சொல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டன.
திடீர் வருகை
திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் உதயநிதி கலந்துகொள்வார் என எந்த இடத்திலும் விளம்பரங்கள் கொடுக்கப்படாத நிலையில், திடீர் வருகை புரிந்தார் உதயநிதி ஸ்டாலின். நிகழ்ச்சி நிரலில் அவர் கலந்துகொள்வது என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. ஆனால் திடீரென அவர் மேடைக்கு வந்தது அங்கிருந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வியப்பை தந்தது. உதயநிதியை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை வரவேற்று பேசிய நேரு, உதயநிதியையும் பேசுமாறு கூறி பேச வைத்தார்.
உதயநிதி கோரிக்கை
மைக் பிடித்த உதயநிதி ஸ்டாலின், தன்னை திடீரென நேரு பேச கூறிவிட்டார் என கலகலப்புடன் பேச்சை தொடங்கினார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இளைஞரணி தம்பிமார்களுக்கு குறைந்த வாய்ப்பே அளிக்கப்பட்டதாகவும், ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகம் வாய்ப்பு தர வேண்டும் கோரிக்கை விடுத்தார். அதைக் கேட்டு ஆமோதிப்பது போல் பார்த்த ஸ்டாலின் சிரித்தார். கே.என்.நேரு, துரைமுருகன் ஆகியோரும் ஸ்டாலினை பார்த்து சிரித்து அவர் ரியாக்ஷனை எதிர்பார்த்தனர்.
வீர வாள் பரிசு
உதயநிதி ஸ்டாலின் பெருந்தன்மையுடன் இந்த மாநாட்டிற்கு வந்து சென்றது மகிழ்ச்சி தருவதாகவும், காலையிலேயே அவர் தன்னை தொடர்பு கொண்டு மாநாட்டிற்கு நான் வருகிறேன் என கூறிவிட்டதாகவும் நேரு தெரிவித்தார். ஆனால் எந்த இடத்திலும் தனது படம் இருக்கக் கூடாது என உதயநிதி அன்புக்கட்டளை போட்டுவிட்டதாக நேரு பேசும் போது கூறினார். இறுதியாக உதயநிதி ஸ்டாலின் மேடையில் இருந்து புறப்படும் முன்பு அவருக்கு வெள்ளி வீர வாள் பரிசாக தரப்பட்டது.