குறையாத வெயிலின் உக்கிரம்.. அறிவிக்கப்படாத மின்வெட்டு.. பனை ஓலை விசிறிகளுக்கு அமோக வரவேற்பு
திருச்சி: அக்னி நட்சத்திரம் முடிந்தும் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, மக்கள் மத்தியில் பனை ஓலை விசிறிகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. பகல் நேர வெப்பநிலை தற்போது 110 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவையும் தாண்டி சமயத்தில் பதிவாகி வருகிறது.
கடுமையான வெயில் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்லவே தயங்குகின்றனர். அப்படியே வெயிலில் சென்றாலும் சிறிது நேரத்திற்குள்ளாகவே ஆற்றலை உறிஞ்சி எடுத்து விடுகிறது சூரியன்.
சரி வீட்டினுள்ளேயே இருக்கலாம் என நினைக்கும் மக்களுக்கும் வேட்டு வைக்கிறது மின்வாரியம். தமிழகத்தின் பல இடங்களில் பகலில் 3 மணி நேரம் இரவில் 1 முதல் 2 மணி நேரம் என அவ்வப்போது மின்வெட்டு செய்யப்படுகிறது.
நீலகிரியில் ஒரே நாளில் 6 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன... மாணவர்கள் அதிர்ச்சி
மின்வெட்டின் போது ஏசி மற்றும் மின்விசிறி ஓடாத சமயங்களில், வியர்வை மழையில் குளித்து விடுகின்றனர் பொதுமக்கள். இதனை சமாளிக்க பெரிதும் கைகொடுக்கின்றது பனை ஓலை விசிறிகள்.
கடைகளில் பனை ஓலை விசிறிகள் ரூ100 வரை விற்கப்படுகிறது. விசிறிகளில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பின், அதற்கேற்றவாறு விலையும் சற்று கூடுதலாகிறது. சமயத்தில் தெருவில் விசிறிகளை சுமந்து வந்து விற்பர்கள் கடைகளில் விற்பதை விட விலை குறைவாகவே விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து தகவல் தெரிவித்த விசிறி வியாபாரிகள், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, பனை ஓலை விசிறிகளின் விற்பனையும் அதிகமாக இருக்கும். தற்போது பனை ஓலை விசிறிகளை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இயற்கையான காற்று கிடைக்கிறது என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதாக குறிப்பிட்டனர்.
மொத்தமாக கடைகளுக்கு ஆர்டரின் பெயரில் பனை ஓலை விசிறிகளை செய்து தருவதில்லை என கூறும் தயாரிப்பாளர்கள், அதற்கு காரணமாக நாங்கள் கைத்தொழிலாக செய்யும் விசிறிகளை கடைகளில் மிக அதிக விலைக்கு விற்கின்றனர்.
இதில் எங்களுக்கு உடன்பாடில்லை, எனவே சாதாரண மக்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் பனை ஓலை விசிறிகளை தயாரித்து விற்று வருகிறோம் என கூறியுள்ளனர். விசிறிகள் செய்யும் முறை பற்றி விளக்கிய அவர்கள், இதற்காக காய வைக்கப்பட்ட பனை ஓலைகளை, தண்ணீரில் ஊற வைத்து அதன் பிறகு, விசிறி வடிவத்துக்கு கத்தியால் நறுக்கி கொள்வோம்.
நறுக்கப்பட்ட பனை ஓலையை வடிவமைத்த பின்னர் அதற்கு பச்சை, சிவப்பு நிற சாயம் போடுவோம். பின் ஈச்சம் செடியிலிருந்து சேகரிக்கப்பட்ட குச்சி, பனை ஓலை குருத்து, பனை நாறு உள்ளிட்டவற்றை வைத்து விசிறிக்கு வேலைபாடுகள் செய்து பனை ஓலை விசிறியாக முழுமையாக வடிவமைக்கிறோம் என கூறினர்.
இவர்கள் ஒரு விசிறியை அதிபட்சமாக ரூ.30 வரை தான் விற்கின்றனர். ஆனால் கடைகளிலோ இதே விசிறியை ரூ.100 வரை விற்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெருக்களுக்கு சென்று விற்பதால், தங்களுக்கு விற்பனை நன்றாக நடைபெறுவதாகவும், நாளொன்றுக்கு 100 முதல் 150 விசிறிகள் வரை விற்பனையாவதாகவும் கூறியுள்ளனர். பெரும்பாலும் விசிறிகளை ஜோடியாக விற்கிறோம். மக்களும் அதனை ஆர்வமுடன் வாங்குகின்றனர் என கூறினர்.