மணப்பாறை மக்களுக்கு ஒரு நற்செய்தி.. இனி அங்கு வைகை நிற்கும்
மணப்பாறை ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்கிறது வைகை எக்ஸ்பிரஸ்
திருச்சி: வைகை எக்ஸ்பிரஸ் இனிமேல் மணப்பாறை ஸ்டேஷனில் நின்று செல்லும் என்பதால் பொதுமக்கள் குஷியாகி உள்ளனர். மணப்பாறைக்கு வந்த வைகை எக்ஸ்பிரஸை வரவேற்ற மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை அதனை கொடியசைத்து தொடங்கியும் வைத்திருக்கிறார்.
திருச்சி, திண்டுக்கல்லுக்கு இடையே அடுத்த பெரிய ஊர் மணப்பாறைதான், இங்கு ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.
திருச்சி, திண்டுக்கல்லுக்கு இடைப்பட்ட 110 கி.மீக்கு இடையில் மணப்பாறை ரயில்வே ஸ்டேஷன் மட்டும்தான் இருக்கிறது.
பணிகள் முடிந்தன
அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு மணப்பாறையில் எல்லா ரயில்களும் நின்று சென்றன. ஆனால் அந்த பணிகள் முடிவடைந்த பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றுகூட மணப்பாறையில் நிற்பதில்லை.
தம்பிதுரை நடவடிக்கை
அதனால் மணப்பாறையில் வைகை எக்ஸ்பிரஸ் நிற்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நிறைய போராட்டங்களை நடத்தினர். மக்களின் இந்த கோரிக்கையை கரூர் மக்களவை தொகுதி எம்பியும், மக்களவை துணைதலைவருமான மு.தம்பிதுரை மத்திய ரயில்வே அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
ரயில்வே நிர்வாகம்
இதைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் 6 மாத காலத்திற்கு சோதனை அடிப்படையில் மணப்பாறையில் நின்றுசெல்லும் என்ற அரசாணை வெளியிட்டது. பின் இந்த சோதனை முடிந்து, மணப்பாறையில் சென்ற 16ம் தேதி முதல் காலை 8.45 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் மணப்பாறை ஸ்டேஷனில் நின்று செல்லும் என ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
மு.தம்பிதுரை
அதன்படியே, மணப்பாறை ரயில்வே ஸ்டேஷன் வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மக்களவை துணை தலைவர் மு. தம்பிதுரை மலர் தூவி வரவேற்றார். அவருடன் எம்பி டி. ரத்தினவேல், மணப்பாறை எம்எல்ஏ ஆர். சந்திரசேகர் ஆகியோரும் மலர் தூவி ரயிலுக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் பச்சைக் கொடியசைத்து ரயில் வழியனுப்பப்பட்டது.