நான் இன்னும் சில வருஷங்களே உயிரோடு இருப்பேன்.. வைகோ உருக்கம்
நான் ஒரு போராளி, எனக்கு தோல்வி கிடையாது என வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி: "நான் இன்னும் சில வருஷங்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன்" என்று விழா ஒன்றில் வைகோ பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இஸ்லாமும், தமிழும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது அங்கிருந்த மாணவர்களை பார்த்து தம்பிகளே என்று கூறினார்.
பேரன் இருக்கிறான்
பிறகு திடீரென மாணவர்களை பார்த்து, "உங்களை தம்பிகளே என்று கூப்பிடக்கூடாது, எனக்கு வயது அதிகம், உங்கள் வயதில் எனக்கு பேரன் இருக்கிறான்" என்றார்.
மகாத்மா காந்தி
தொடர்ந்து பேசிய வைகோ திடீரென மகாத்மா காந்தியின் தியாகம் பற்றி கூறினார். காந்தியின் நினைவு தினத்தன்று இந்து அமைப்பு தலைவி பூஜா பாண்டே காந்தியின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து, துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியது குறித்து பேசினார்.
கதறி அழுதார்
அப்போது வைகோ திடீரென நா தழு தழுக்க பேசி கண்கள் கலங்கி கதறி அழுதுவிட்டார். காந்தியின் உருவத்தை சித்தரித்த விதம் குறித்து பேசும்போது கண் கலங்கியபடியே தெரிவித்தார்.
எனக்கு தோல்வி இல்லை
தொடர்ந்து பேசிய வைகோ, "நான் ஓர் போராளி, எனக்கு தோல்வியே கிடையாது. ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், நாட்டின் மதச்சார்பின்மையை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடி வருகிறேன்.
இன்னும் சில ஆண்டுகளே
மதச்சார்பின்மையை காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் போகாது. நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும்தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன், என்றார்.