வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று பெருமாள் பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா கோலம்தான். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு வரும் 14ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 25ஆம் தேதி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் பெருமாள் பக்தர்களுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தான். பூலோக வைகுண்டம் என்றும், பூலோக சொர்க்கம் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை ஒரு முறை தரிசித்தாலே நமக்கு, திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள மஹாவிஷ்ணுவின் அருகிலேயே வாசம் செய்வதற்கான பாக்கியம் நமக்கு கிட்டும் என்பது வைணவர்களின் நம்பிக்கையாகும்.
பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் முதல் கோவிலான சயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான். பார்த்த உடனேயே நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பிரமாண்ட தோற்றமும், அவரின் கண்களும், நாள் முழுவதும் அங்கேயே நின்றுகொண்டு பாதத்தில் தொடங்கி படிப்படியாக கண்கள் வரையிலும் பார்த்துக்கொண்டே இருக்கலாமே என்று நம்மை ஏங்க வைக்கும்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவையும் காண பக்தர்கள் மாநிலம் முழுவதிலும் இருந்து வருவார்கள். கொரோனா காலம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. கோவில் திருவிழாக்களில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கிறது. வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தயாராகி வருகிறது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.
வைகுண்ட ஏகாதசி விழா
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி விழா வரும் 14ஆம் தேதி தொடங்கி, பகல் பத்து மற்றும் ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் என்றும், இந்த விழா ஜனவரி 4 ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நம்பெருமாள் தரிசனம்
வரும் 15ஆம் தேதி முதல் பகல் பத்து திருநாள் தொடங்கி, 24 ஆம் தேதி பகல்பத்து திருவிழாவில் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார் என்றும், இந்த விழாவில் 1 முதல் 9ஆம் திருநாள் வரை, புறப்பாட்டுக்கு பின் பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய உடன் பக்தர்கள் போதிய சமூக இடைவெளி உடன் முககவசம் அணிந்து மாலை 7 மணி முதல் 8 மணி வரை 1 மணி நேரம் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
வைகுண்ட ஏகாதசி
ராப்பத்து திருவிழாவின் முதல் நாளும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியும் ஆன சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் 25ஆம் தேதி காலை 8 மணி வரை ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 25ஆம் தேதி காலை 8 மணிக்கு பிறகு ஆன்லைனில் பதிவுசெய்த பக்தர்கள் அரசு வழிகாட்டுதலின்படி தரிசனம் அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
ராப்பத்து விழாவில், 7ஆம் நாள் திருவிழாவான டிசம்பர் 31ஆம் தேதி திரு கைத்தல சேவையும், 8ஆம் நாள் திருவிழாவான ஜனவரி ஒன்றாம் தேதி திருமங்கை மன்னன் வேடுபரி நிகழ்ச்சியும், 10ஆம் நாளும் வைகுண்ட ஏகாதசி விழாவின் நிறைவு நாளான தீர்த்தவாரி என ராப்பத்து விழாவின் முக்கிய 3 நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேரலையில் ஒளிபரப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவை 21 நாட்களும் கோயில் இணையதளத்திலும் Srirangam temple என்ற யுட்யூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் பக்தர்கள் தடையின்றி கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பொதுமக்கள் யாரும் டிசம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் 25ஆம் தேதி காலை 8 மணி வரை ஸ்ரீரங்கத்திற்கு வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.