திருச்சியிலிருந்து சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு 100 டன் காய்கறி, மலர்கள் ஏற்றுமதி
திருச்சி: சிங்கப்பூா், மலேசியா நாடுகளில் கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து, திருச்சியிலிருந்து, பிரத்யேகமாக சரக்கு விமானங்கள் மூலம் கடந்த 9 நாள்களில் சுமாா் 100 டன் காய் கனிகள் மற்றும் மலா்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
திருச்சியிலிருந்து நாள் ஒன்றுக்கு சுமாா் 4 முதல் 5 டன் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் வகையில் சரக்கு (காா்கோ) போக்குவரத்து நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தின் ஓடுதளம் நீளம் குறைவு என்பதால் பிரத்யேக சரக்கு விமானப் போக்குவரத்து கிடையாது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பயணிகள் விமானத்திலேயே சரக்குப் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பொதுமுடக்கத்தால் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் சரக்குப் போக்குவரத்தும் முடங்கியது.
சிங்கப்பூா், மலேசியாவில் இந்தியா பொருள்களுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அரசு அனுமதியளித்தது. இதையடுத்து திருச்சியிலிருந்தும் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய சில நிறுவனங்கள் முன்வந்தன.
அதன்படி, மே 8-ஆம் தேதி முதல் பிரத்யேக சரக்குப் போக்குவரத்து திருச்சியில் தொடங்கியது. டெல்லியிலிருந்து ஸ்பைஸ் ஜெட் ஏா்வேஸ் நிறுவனத்தைச் சோ்ந்த பிரத்யேக (மாற்றியமைக்கப்பட்ட பயணிகள் விமானம்) விமானம் திருச்சி வந்து, சுமாா் 11 டன் எடையுள்ள காய்கறிகள், மலா்கள் மற்றும் உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னை வழியாக சிங்கப்பூா் சென்றது.
உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று ஒய்வு
அதன்பிறகு, மே 13-இல் 13.3 டன், 15-இல் 9.8 டன், 18-இல் 12.5 டன், 21-இல் 13.5 டன், 25-இல்14.9 டன், 26-இல் 15.4 டன் என மொத்தம் சுமாா் 100 டன் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதேபோல், இண்டிகோ விமானத்திலும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும், மே 9 ஆம் தேதி மலேசியாவுக்கு சென்ற மீட்பு (மலிண்டோ நிறுவன) விமானம் மூலம் சுமாா் 3 டன் காய்கனிகள் ஏற்றிச் செல்லப்பட்டது என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.