"பீரங்கி" மூலம் கிருமிநாசினி.. வேட்டியை மடித்துக் கட்டி களத்தில் இறங்கிய அமைச்சர் வெல்லமண்டி!
திருச்சி: கொரோனா பரவுதலைத் தடுக்கும் நோக்கில் திருச்சி மாநகர பகுதியில் இன்று காலை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீதிவீதியாகச் சென்று பீரங்கியை போன்று காட்சியளிக்கும் கருவி மூலம் கிருமிநாசினி தெளித்தார்.
Recommended Video
கொரோனா பெருந்தொற்று காரணமாக, நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் முக்கியச் சாலைகள், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பீரங்கி
அதேபோல் இன்று காலை திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சாலையில் கொரோனா நோய் பரவாமல் தடுக்க கிருமி நாசினியை அவரே தெரு தெருவாகவும் கடைவீதியாகவும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெளித்தார். பீரங்கி போல் இருந்த கருவி மூலம் கிருமிநாசினி தெளித்தார்.
அமைச்சர்
வேட்டியை மடித்துக் கொண்டு அமைச்சர் கொரோனாவுக்கு எதிராக களமிறங்கினார். திருச்சி மாநகர பகுதியில் உள்ள என்.எஸ்.பி. சாலை, பெரிய கடை வீதி, மேல பொலிவார் சாலை, காந்தி மார்க்கெட், வெல்லமண்டி, வெங்காய மண்டி, வான பட்டறை மாரியம்மன்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
அமைச்சரே தெளித்தார்
இதில், மாநகராட்சிப் பணியாளர்கள் கலந்துகொண்டு கை தெளிப்பான், சிறிய அளவிலான கருவிகள் மூலம் சாலைகளின் இருபுறங்களிலும் கிருமி நாசினி தெளித்தனர். பல இடங்களில் அமைச்சரே நேரடியாக கிருமிநாசினி தெளித்தார். இந்தத் தூய்மைப் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
பாராட்டு
பின்னர் அமைச்சர் தூய்மை பணியாளர்கள் பணி எப்போதும் தன்னலம் கருதாது செய்து வருகிறார்கள். அவர்களை உற்சாகம் படுத்த வேண்டும் நோக்கில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்து உற்சாகபடுத்தினார்.