விஜய் அரசியல்.. வரவேற்கும் திருமாவளவன்.. சசிகலா, அதிமுக குறித்து சொன்ன முக்கியமான விஷயம்
திருச்சி: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் . அதிமுகவிற்கு வலுவான தலைமை அமையவில்லை. பாஜகவைச் சார்ந்து இருக்கும்வரை அதன் சரிவு தொடரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முதலாக 169 வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர். இதில் 115 பதவிகளில் விஜய் மக்கள் இயக்க ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் தனது ரசிகர்களுக்கு வாக்களிக்குமாறு விஜய் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பிரச்சாரமும் செய்யவில்லை. ஆனாலும் கணிசமாக வெற்றி பெற்றுள்ளனர்.
சிஎஸ்கே vs கேகேஆர்.. 2 டீமில் மொத்தம் 6 பேர்.. ஐபிஎல் கப் யாருக்குன்னு தீர்மானிக்க போறது இவுங்கதான்!
மக்களிடம் கிடைத்த இந்த வரவேற்பு, விஜய் மக்கள் இயக்கத்தினரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் அண்மையில் அளித்த பேட்டியில் எத்தனை பேர் வெற்றி பெற்றனர் என்பதை தெரிவித்தார்.
விஜய் மக்கள் இயக்கம்
புஸ்ஸி ஆனந்த் கூறும் போது, தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஆதரவுடன் கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் என்.பி.எஸ்.சாவித்திரி லோகநாதன் என்பவர், விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம், எறையூர் ஊராட்சி மன்றத் தலைவியாக வெற்றி பெற்றுள்ளார் என்றார்.
ரசிகர்கள கோபம்
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சீமான் இதுபற்றி கூறும் போது, விஜய்க்காக வந்த வாக்குகளாக இதை நான் கருதவில்லை. ஏற்கனவே அங்கு போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உள்ளவர்கள் என்று கூறினார். இந்த கருத்து விஜய் ரசிகர்களை கோபம் அடையவைத்துள்ளது. சீமானுக்கு எதிராக போஸ்டர் அடித்து ஓட்டியுள்ளனர்.
Recommended Video
சீமான் மீது கோபம்
சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் இதுபற்றி கூறும் போது, விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு உள்ளூர் செல்வாக்கு இருக்கும் போது ஏன் உங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு அந்த செல்வாக்கு இல்லை என்கிறீர்களா? இல்லை செல்வாக்கு இல்லாத நபரை வேட்பாளராக்கினீர்களா? என கேட்கிறார்கள். அடுத்தவர்களை திட்டுவதை விட்டு விட்டு கட்சி வளர்ச்சியையும் வெற்றி பெற்றால் செய்யப்போகும் நலத்திட்டங்களையும் சொல்லி இருந்தால் கணிசமான இடங்கள் கிடைத்திருக்கும் என்று கூறுகிறார்கள்.
விஜய்க்கு வரவேற்பு
இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து திருச்சியில் செய்தியாளளை சந்தித்த திருமாவளவன் பேசும்போது, ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது அதில் வி.சி.க43 ஒன்றிய கவுன்சில் இடங்களிலும் 4மாவட்ட கவுன்சில் இடங்களிலும் போட்டியிட்டது. அதில் 27 ஒன்றிய கவுன்சில் இடங்களையும் 3மாவட்ட கவுன்சில் இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம் இது அனைத்து தரப்பு மக்களும் வி.சி.கவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை காட்டுகிறது.
இரட்டை வேடம்
பா.ஜ.க வும் சங்பரிவார் இயக்கங்களும் சமூக நீதிக்கு எதிராக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டு வருகின்றனர்
பா.ஜ.க ஒருபுறம் சமூக நீதியை ஆதரிப்பது போலவும் மறுப்பக்கம் அதற்கு சவக்குழி தோண்டும் வேலையையும் செய்து வருகிறது, இது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது, இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். வரும் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அதிகாரத்தில் அமர்வதை தடுக்க இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது. தஞ்சை கும்பகோணம் அருகே பிரபாகரன் என்கிற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம், அந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அளிக்கிறது
கடந்த 15 ஆண்டுகளாக கெளரவ கொலைகள் தமிழ்நாட்டில் அதிகமாகி நடந்து வருகிறது, வட மாநிலத்தை விட தமிழ்நாட்டில் ஆணவப்படு கொலைகள் குறைவாக இருக்கும் ஆனால் தற்போது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஆணவப்படுகொலை தடுப்பு சட்டத்தை அவசர சட்டமாக இயற்ற வேண்டும்.
விஜய் அரசியல்
விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒத்திகையாக பார்க்க முடியாது, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம். தமிழ்நாட்டில் அதிகம் கவனிக்க கூடிய வெற்றியாக தி.மு.க கூட்டணியின் வெற்றி அமைந்துள்ளது.
சசிகலா
அ.தி.மு.க விற்கு வலிமையான தலைமை அமையவில்லை.பா.ஜ.க வை சார்ந்து இயங்கும் வரையில் அ.தி.மு.க விற்கு இந்த சரிவு தொடரும்.அ.தி.மு.க வினரால் தலைவர் பொதுச்செயலாளர் உள்ளிட்டவர்களை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை,அ.தி.மு.க வில் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் இருந்த கட்டுக்கோப்பு தற்போது இல்லை. அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டேன் என அறிவித்து விட்டு மீண்டும் சசிகலா அரசியலுக்கு வந்தால் அதை நாம் விமர்சிக்க முடியாது. சசிகலா விரும்பும் நேரத்தில் அரசியலுக்கு வருவதை நாம் நிராகரிக்க முடியாது.தலைவர்களின் சமாதிக்கு சசிகலா செல்ல அனுமதி கேட்டுள்ளார் அவருக்கு அதற்கு உரிமை இருக்கிறது அவரை யாரும் தடுக்க முடியாது. அவருக்கு அனுமதி வழங்க வேண்டும்.
திருமாவளவன் கருத்து
பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் தனியார் எண்ணெய் நிறுவனங்களிடம் இருக்கிறது. இந்த அதிகாரத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசாக பா.ஜ.க அரசு இருக்கிறது.நீட் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பிற மாநில முதல்வர்களின் ஆதரவை திரட்டுவது பாரட்டத்தக்கது. தமிழ்நாடு சட்டபேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர்,குடியரசு தலைவர் ஆகியோரிடம் கையெழுத்துப் பெற்று தர வேண்டியது பா.ஜ.க அரசின் கடமை. நீட் தேர்வை ரத்து செய்யும் விவகாரத்தில் சட்ட ரீதியான தீர்வை தி.மு.க கொண்டு வரும் என நம்புகிறோம்.என்கவுண்டர், மரண தண்டனை கூடாது என்பது தான் வி.சி.க வின் நிலைப்பாடு. சட்ட ரீதியாக தண்டனை வழங்குவது தான் சரியான நடைமுறை.காந்தியின் மிக முக்கியமாக கோரிக்கைகளின் ஒன்று மது விலக்கு.தி.மு.க அதை நடைமுறைப்படுத்த வேண்டும். மது விலக்கு கொள்கையை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.ஆளும் பா.ஜ.க அரசு அதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும்" இவ்வாறு கூறினார்.