மாஸ்டர் படத்திற்காக "மட்டும்" விஜய் என்னை சந்திக்கவில்லை.. விஷயம் வேறு.. போட்டு உடைத்த முதல்வர்
திருச்சி: நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தொடர்பாக மட்டும் தன்னை சந்திக்கவில்லை என்று முக்கியமான ஒரு தகவலை முதன் முறையாக வெளியே சொல்லியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், பொங்கல் தினத்தையொட்டி, தியேட்டர்களில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேநேரம், கொரோனா நோய் பரவல் காரணமாக, தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
மாஸ்டர் பற்றி கோரிக்கை
இந்த நிலையில்தான், சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்தார். இரவு 10 மணிக்கு மேல் ரகசியமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. எந்தத் தரப்பும் இதுபற்றி தகவல் தெரிவிக்காத நிலையில், மறுநாள் காலையில், பத்திரிகையாளர்கள் மூலமாக இந்த தகவல் வெளியுலகிற்கு தெரியவந்தது.
மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படும் போது தியேட்டர்களில் 100 சதவீதம் அளவுக்கு ரசிகர்களை அமரச் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென்று விஜய் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அரசியல் காரணங்கள்
கொரோனா நோய் பரவல் காலத்தில் தனது திரைப்படத்திற்காக விஜய் இவ்வாறு ஒரு கோரிக்கையை முன் வைக்கலாமா என்று ஒரு தரப்பு கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தது. இன்னும் சிலரோ, அரசியல் காரணங்களால் எடப்பாடியை விஜய் சந்தித்து இருக்கக்கூடும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில்தான், சந்திப்பின் போது நடந்தது என்ன என்ற தகவலை முதல்வர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
முதல் முறை ஓபன்
முதல் முறையாக சந்திப்பில் பங்கேற்ற ஒரு தரப்பு, ஓபனாக இந்த சந்திப்பு நடந்ததை உறுதிப்படுத்தி உள்ளது என்பதும் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அப்படி என்ன சொன்னார் இதோ பாருங்கள்: திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதலில் ரஜினிகாந்த் பற்றி தெரிவித்தார்.
ரஜினி பற்றி கருத்து
எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், ரஜினி உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். ரஜினி உடல்நிலை சரியான பிறகு என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது. கட்சி துவங்குவாரா, இல்லையா, அல்லது வேறு என்ன எண்ணத்தில் இருக்கிறார் என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மற்றவர்களின் முடிவில் நாம் கருத்து கூறுவது சரியாக இருக்காது. இது ஜனநாயக நாடு என்பதால் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.
பல படங்கள்
இவ்வாறு தெரிவித்த முதல்வர், விஜய் உடனான சந்திப்பு பற்றி கூறுகையில், விஜய் என்னை சந்தித்தது மாஸ்டர் திரைப்படத்துக்காக மட்டும் கிடையாது. இன்னும் பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து படத்தை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். எனவே நீங்கள் திரை உலகிற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விஜய் ரசிகர்கள்
மாஸ்டர் படத்திற்காக மட்டுமே கிடையாது, ஒட்டுமொத்தமாக தமிழ் திரையுலகமும், படங்களை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் கஷ்டத்தை அனுபவித்து வரும் நிலையில், பிற அனைத்து படங்களுக்கும் சேர்த்து விஜய் பேசியுள்ளார் என்பதை முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து தமிழ் சினிமாவின் பாதுகாவலர் விஜய், என்ற பெயரில், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.