கேரளத்தில் அதிக பாதிப்பு.. தமிழகத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறோம்.. விஜயபாஸ்கா்
திருச்சி: கேரளத்தில் அதிக பாதிப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம் என்றும் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் 4 பேருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தார்
Recommended Video
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனி வார்டை நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளரிடம் பேசுகையில், "திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவா்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இருந்த போதிலும் அவா்கள் அனைவரும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்குச் சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்க அறிவுறுத்தியுள்ளோம். அந்த வார்டுகளை அரசு சார்பில் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, அங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படும்.
கேரளத்தில் அதிக பாதிப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம். கொரோனா பாதிப்பைக் கண்டறியும் பரிசோதனை மையங்கள் திருவாரூா் மற்றும் திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு இடங்களில் அமைக்க பட உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு, கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதன்மையா் வனிதா, மாவட்டச் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.