நாசகார கூட்டத்திற்கு அடிபணிந்து விடக் கூடாது.. திமுகவுக்கு பக்கபலமாக இருப்போம்... வைகோ முழக்கம்
திருச்சி: லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு பக்கபலமான இருப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
விமர்சனங்கள் ஆயிரம் வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில், எத்தனை சீட்டு ஒதுக்கீடு என்று இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்தநிலையில், திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது, என்றுள்ளார்.
திமுகவுக்கு பக்கபலம்
மதிமுக சார்பில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெறவுள்ள கருணாநிதி புகழ் போற்றும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேச உள்ளார். திராவிட இயக்கத்தைப் பாதுகாப்பதற்காக திமுகவுக்கு பக்கபலமாக இருப்பது என முடிவெடுத்து, அதன்படி தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
தமிழக அரசு தான் பொறுப்பு
நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும் கூறினார்.
காணாமல்போன சமூக செயற்பாட்டாளர் முகிலனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சமூக விரோதக் கூட்டம்
முன்னதாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு டெல்டா பகுதிகளை விற்க அரசு முடிவெடுத்து விட்டதாக குற்றம்சாட்டிய வைகோ, நம்மை விலைக்கு வாங்க நினைக்கும் சமூக விரோதக் கூட்டத்துக்கு மக்கள் சாட்டையடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாசகார கூட்டம்
நான் தமிழகத்தின் கடைசி ஊழியனாக இருந்து கேட்கிறேன். நம்மை விலைக்கு வாங்க ஒரு கூட்டம் தயார் ஆகி விட்டது. அந்த நாசகார கூட்டத்திற்கு நாம் அடிபணிந்து விடக் கூடாது. பாஜகவுக்கு ஒரு ஓட்டு கூட போய் விடக் கூடாது எனவும் வைகோ பேசினார்.