4 ஆயிரம் கோடியில் பாதி.. ராமதாஸ் விருந்து பற்றி வேல்முருகன் காட்டம்
திருச்சி: பாமக நிறுவனர் ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு, விருந்தளிப்பது குறித்து, திழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கிண்டல் செய்துள்ளார்.
திருச்சியில் இன்று நிருபர்களிடம் வேல்முருகன் கூறுகையில், ரயில்வே உட்பட மத்திய அரசுப் பணிகள், 60 ஆயிரம் வரை நிரப்பப்பட்டு உள்ள நிலையில், இதில் ஒருவர் கூட தமிழர் இல்லை.
அது மட்டுமா. தமிழகத்தில், 1.20 கோடி வட மாநிலத்தவர்கள் வசிக்கிறார்கள். சத்தமின்றி தமிழர்களின் வாழ்வுரிமையை அவர்கள் பறித்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில், 90%, மாநில அரசுப் பணிகளில், 100% தமிழர்களுக்குத்தான் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, வரும், 28ம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த உள்ளோம்.
கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில், உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும்தான் அப்படி இல்லை.
சேலம் எட்டு வழிச்சாலை பணிக்கு நீதிமன்றத்தில் தடையாணை வாங்கினேன் என்று கூறியவர்களே, இப்போது சாலை திட்டம் போட்டவர்களிடம் கூட்டணி வைத்துள்ளனர்.
அந்த சாலைக்கான மொத்த திட்டச் செலவு, 40 ஆயிரம் கோடி. அதில் கமிஷன் தொகை 4 ஆயிரம் கோடி. பாதி கிடைத்தவுடன் கூட்டணி அமைத்து கொண்டு, ஒன்றாக விருந்து சாப்பிடுகின்றனர். இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.