"சிம்பு" மீது "சித்துவுக்கு" காதல்.. கடைசியில் உயிர் பலியாகி சிறை சென்றதுதான் மிச்சம்!
திருச்சி: திருச்சி அருகே கள்ளகாதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்த மனைவி, கள்ளகாதலன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பெரம்பலூர் மாவட்டம், இருர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து (50) சாலை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள சி.ஆர். பாளையத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு கூலிப்படையினரால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சிறுகனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சித்ராவிடம் விசாரணை நடத்திய போது அவர் சிலவற்றை முன்னுக்கு பின் முரணாக கூறினார்.
விசாரணையில் அம்பலம்
இதனால் போலீஸாரின் சந்தேக பார்வை சித்ராவின் பக்கம் திரும்பியது. பின்னர் சித்ரா குறித்து அக்கம்பக்கத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் முத்துவின் மனைவி சித்ராவிற்கு அதே ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
காவல் துறை
இது முத்துவிற்கு தெரியவந்ததும் அவர் மனைவி சித்ராவை கண்டித்துள்ளார். மேலும் இந்த கள்ளக்காதலுக்கு கணவர் முத்து இடையூறாக இருந்ததால் அவரை கள்ளக்காதலன் மூலம் கூலி படையை ஏவி கொலை செய்ததும் தெரியவந்தது. சித்ராவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
4 பேர் கைது
இந்தநிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சித்ராவின் கள்ளக்காதலன், எம்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த சிலம்புகுட்டி (என்கிற) சிலம்பரசன் ( 22) மற்றும் கூலிப்படையாக செயல்பட்ட பல்லபுரத்தை சேர்ந்த முருகானந்தம் (35), கார்த்திக்ராஜா (19), லால்குடி அருகே உள்ள சிறுமருதூரை சேர்ந்த மணிகண்டன் (28) ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று இரவு அவர்களை கைது செய்தனர்.
பறிமுதல்
மேலும் இந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்காக கட்டிய கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.