ஊரடங்கு ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிப்பா...? திருச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்
திருச்சி: ஜூன் 30-ம் தேதிக்கு மேல் பொதுமுடக்கம் நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
மேலும், தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக நாட்டிலேயே கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவு எனத் தெரிவித்தார்.
கொரோனா ஒரு பக்கம்.. மக்கள் பணி மறுபக்கம்.. கலக்கும் எடப்பாடியார்.. எதிர்க்கட்சிகளுக்கு செக்!
முதல்வர் பேச்சு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் விவரம் உள்ளிட்டவைகளை பட்டியலிட்டார். மேலும், திருச்சி மாவட்டத்திற்கு அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.
உலக சுகாதார நிறுவனம்
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவுக்கு தீர்வு காண முடியாமல் தவிப்பதாகவும், அந்த நாடுகளில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம் என்றும் கூறினார். மேலும், உலக சுகாதார நிறுவனமும், ஐ.சி.எம்.ஆரும் கூறும் ஆலோசனைகளை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தி வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஜூன் 30-ம் தேதி
ஜூன் 30-ம் தேதிக்கு மேல் பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே அது பற்றி முடிவெடுக்கப்படும் எனக் கூறினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவத்துறை சார்ந்தது என்றும், இதில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் இதனைக் கூறியது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க
இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை என்றால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி பேசலாம், இது முழுக்க முழுக்க மருத்துவத்துறை சார்ந்தது என்றும், இதில் அரசியல் கட்சிகளிடம் பேசி செயல்படும் விவகாரம் இல்லை எனவும் முதல்வர் கூறினார். மருந்து கண்டுபிடித்தால் தான் கொரோனாவை ஒழிக்கமுடியும் என்றும், மருந்து கண்டுபிடிக்கும் வரை இந்நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிந்து, சுத்தத்தை பேணி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.