மூட்டைக்கு ரூ.3,000 வரை விலை... சீரகசம்பா நெல் சாகுபடியில் அசத்தும் திருச்சி பெண் விவசாயி..!
திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெண் விவசாயி ஒருவர் 5 ஏக்கர் பரப்பளவில் சீரக சம்பா நெல் சாகுபடி செய்து நிறைவான வருவாய் ஈட்டி வருகிறார்.
வளமான மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்ட இந்த நெல்மணிகளை தனது கிராமத்தில் சாகுபடி செய்து வெற்றி கண்டுள்ளார்.
பெண் விவசாயியின் இந்த சீரிய முயற்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராக வேண்டும் என நான் ஆசைப்படக் கூடாதா..? ஆசைப்பட்டால் என்ன தவறு..? -திருமாவளவன் அதிரடி..!
சீரக சம்பா பயிர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார் கோயிலை சேர்ந்தவர் சுபத்ரா. இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் விளை நிலத்தில் சீரக சம்பா சாகுபடி செய்திருக்கிறார். பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் சீரக சம்பா அரிசிக்கு மார்க்கெட்டில் நல்ல விலை கிடைப்பதை கருத்தில் கொண்டு அவர் இதனை பயிரிட்டுள்ளார். சுபத்ராவுக்கு அவரது குடும்பத்தினர் அளிக்கும் ஊக்கத்தின் காரணமாக விவசாயப் பணிகள் சவாலானதாக தெரியவில்லை.
விவசாயிகள்
பெண் விவசாயி சுபத்ராவை முன்மாதிரியாக கொண்டு மண்ணச்சநல்லூர் பகுதி விவசாயிகள் பலரும் வழக்கமான பொன்னி நெல் சாகுபடிகளை மட்டும் மேற்கொள்ளாமல் பாரம்பரிய கவுனி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா நெல் ரகங்களையும் பயிரிடத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து வழங்குகின்றனர்.
நேரில் பார்வை
பெண் விவசாயி சுபத்ராவின் விளைநிலத்திற்கு சென்று அங்கு பயிரிடப்பட்டுள்ள சீரக சம்பா நெற்பயிர்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சிவராசு அவருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். பெண் என்ற குறுகிய வட்டத்தில் முடங்கிக்கிடக்காமல் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்வதாக சுபத்ராவை ஆட்சியர் பெருமிதப் படுத்தியிருக்கிறார். இது விவசாயி சுப்தராவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ரூ.3,000 வரை விலை
இதனிடையே சீரக சம்பா பயிரிட்டது குறித்து சுபத்ரா கூறியதாவது; '' நான் கடந்த 3 ஆண்டுகளாக சோதனை அடிப்படையில் குறைந்த பரப்பளவில் சீரக சம்பா சாகுபடி செய்து வந்தேன். வேளாண்மைத் துறை அதிகாரிகள் அளித்த வழிகாட்டுதல் காரணமாக இந்தாண்டு தான, 5 ஏக்கர் பரப்பளவில் இந்த நெல் ரகத்தை பயிரிட்டேன். மூட்டை ஒன்றுக்கு ரூ.3,000 வரை கிடைப்பதால் வருவாயும் மன நிறைவை தருகிறது''.