டாஸ்மாக் கடைகளுக்கு தாய்மார்கள் கடும் எதிர்ப்பு... அமைச்சர்களிடம் ஆதங்கம்
திருச்சி: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதற்கு தாய்மார்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் செக்போஸ்ட் அருகே நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தைகளுடன் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி இன்று காலை முழக்கம் எழுப்பினர். அப்போது அவ்வழியாக சென்ற அமைச்சர் வளர்மதி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதனை ஏற்கும் மனநிலையில் இல்லாத தாய்மார்கள், மதுவால் குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையும், தங்கள் ஆதங்கத்தையும் அவரிடம் வெளிப்படுத்தினர்.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் பெண்கள் வீதிக்கு வந்து டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போர்க்குரல் உயர்த்தி வருகின்றனர். மதுவால் குடும்பம் சீரழிவதாகவும், பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்கள் கோரிக்கையை முதல்வரும், அதிகாரிகளும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதனிடையே மதுரையில் கண்டெயின்மெண்ட் ஏற்பாடுகள் குறித்து பார்வையிடச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்கமுடியாமல் சிரமப்படுவதாக பெண்கள் முறையிட்டனர். 28 நாட்களாக தடுப்புக்கட்டைகள் அமைத்து அடைத்து வைக்கப்பட்டால் உணவுக்கு என்ன செய்வோம் என அவர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். அதைக்கேட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிகாரிகளிடம் இது தொடர்பாக பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
எதிர்பார்த்ததை விட அதிகம்.. புதிய ரெக்கார்ட் படைத்த டாஸ்மாக் வசூல்.. முதல் நாளே பல கோடி வருமானம்!
அமைச்சர் செல்லூர் ராஜூ இல்லத்தின் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடைக்கு செல்லூர் பகுதி பெண்கள் ஒன்றுதிரண்டு பூட்டுபோட்டனர். மேலும், மதுவாங்குவதற்காக அங்கு வரிசையில் நின்ற குடிகாரர்களை அங்கிருந்து கலைந்து செல்லவும் வைத்தனர். ஆண்களை விட பெண்களுக்கு மனதைரியம் அதிகம் என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.