திருச்சியில் பெண் போலீஸ் சரண்யாவின் மீது மோதி கவிழ்ந்த லாரி- இடது காலை இழந்த பரிதாபம்
சனிக்கிழமையன்று லாரி மோதியதில் காயம் அடைந்த திருச்சி மாநகர ஆயுதப்படை பெண் போலீஸ் ஏட்டு சரண்யாவின் இடது கால் அகற்றப்பட்டது
திருச்சி: லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்துடன் லாரிக்கு அடியில் சிக்கிய பெண் காவலர் சரண்யாவின் இடது கால் அகற்றப்பட்டது. திருச்சியில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது நண்பர் உயிருக்கு போராடி வருகிறார்.
ஜூன் 1ஆம் தேதி சனிக்கிழமையன்று வீட்டை விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார் சரண்யா. தான் இருசக்கர வாகனம் ஓட்டுவது இதுதான் கடைசியாக இருக்கும் என்று அப்போது அவருக்கு தெரியாது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த முஸ்தபா மகன் அஜீத் ரஹ்மான் திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள சேதுராமன் பிள்ளை காலனியில் உள்ள நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். அவரும் ஜூன் 1ஆம் தேதி தனது வீட்டை விட்டு கிளம்பும் போது நினைத்திருக்க மாட்டார் அதுதான் தனது கடைசி பயணம் என்று.
லாரி வடிவில் வந்த எமன் அஜீத் ரஹ்மானின் உயிரை குடித்ததோடு அவரது நண்பர் முகமது ஆசிக்கை நசுக்கியதோடு காவலர் சரண்யாவின்இடது காலை காவு வாங்கி விட்டது.
லாரியில் அதிக பாரம்
ஜூன் 1ஆம் தேதியன்று திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட்டில் இருந்து கே.கே. நகரில் உள்ள மத்திய தானிய கிடங்கிற்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லாரி சேதுராமன் பிள்ளை காலனி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அங்கிருந்த விநாயகா ஏஜென்சி என்ற வாகன உதிரிபாகங்கள் விற்கும் கடைக்குள் புகுந்து சாலையில் கவிழ்ந்தது.
மூவர் சிக்கினர்
சாலை ஓரத்தில் இருந்த டீக்கடையில் நின்று பேசிச்கொண்டிருந்த அஜீத் ரஹ்மான் அவரது நண்பர் முகமது ஆசிக் ஆகியோர் லாரிக்கு அடியில் சிக்கினர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேலைக்கு போய்க்கொண்டிருந்த பெண் காவலர் சரண்யாவும் லாரிக்கு அடியில் சிக்கி நசுங்கினார். கவிழ்ந்த வேகத்தில் லாரியில் இருந்த டீசலுக்கும் கொட்டியது.
விபத்தில் சிக்கிய மூவர்
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அஜீத் ரஹ்மான் உயிரிழந்தார், அவரது நண்பர் முகமது ஆசிக்கும், காவலர் சரண்யாவும் உடலில் பலத்த காயங்களுடன் வலியோடு உயிருக்கு போரடினர். நெல்மூட்டைகளுடன் கவிழ்ந்த லாரியால், இருசக்க வாகனம் அப்பளம் போல நொறுங்கியிருந்தது. ரத்தம் அதிகம் வெளியேற மூர்ச்சையானார் சரண்யா.
மூவரும் மீட்பு
தீயணைப்பு படை வீரர்களும், காவலர்களும் வந்து நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தினர். தீப்பிடிக்காமல் இருக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. கிரேன் மூலம் லாரியை எடுத்து லாரிக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். சரண்யாவும் முகமது ஆசிக்கும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த அஜீத் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
விபத்தில் கால் இழப்பு
லாரிக்கு அடியில் கால் சிக்கியதில் சரண்யாவின் கால் எலும்பு சிதைத்து போனது. அந்த காலை அகற்றினால்தான் உயிரை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் தெரிவிக்கவே, பெற்றோர்கள் சம்மதத்துடன் இடதுகால் அகற்றப்பட்டது. வேலைக்கு கிளம்பிய சரண்யாவின் வாழ்க்கையில் எமனாக வந்த லாரியால், இடதுகாலை இழந்து வாழ்க்கையை இழந்து தவிக்கிறார். இந்த விபத்து குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.