குப்பை கொட்டுவதில் பிரச்சனை.. பறிபோனது 2 உயிர்.. வெட்டிக் கொன்றவருக்கு 2 ஆயுள் தண்டனை
திருச்சி: திருச்சி அருகே இரண்டு பெண்களை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிசங்கர் தீர்ப்பு வழங்கினார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள திண்ணியம் கிராமம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மகன்கள் சுதாகர், சுரேஷ். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பன்னீர். இவர்கள் குடும்பத்திற்கிடையே குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு பன்னீரின் சகோதரர்கள் ரவி, ராமகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் சுதாகரின் அண்ணன் சுரேஷ் என்பவரை வெட்டிக் கொலை செய்தனர். இதனால் இரு குடும்பத்தாரிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி பன்னீரின் தாய் செல்லம்மாளும், அத்தை அமராவதியும் அவர்கள் வீட்டருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களை சுதாகர்(23) அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க வந்த சதீஷ் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. இதையடுத்து சுதாகர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இன்று திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிசங்கர் தீர்ப்பளித்தார். அதில் சுதாகருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சதீஷை வெட்டியதற்காக கூடுதலாக 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து சுதாகர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.